
International
oi-Vigneshkumar
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வாத்தை இறைச்சிக்காக வெட்டியுள்ளார். அப்போது வாத்தின் உள்ளே சுமார் ரூ.1.65 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்துள்ளது. இதைப் பார்த்தவுடன் அந்த விவசாயி மகிழ்ச்சியின் உச்சத்திற்குப் போய்விட்டார். ஆனாலும், கடைசியில் அதிகாரிகள் வந்து ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
பொதுவாக ஒருவருக்கு எப்போது எப்படி அதிர்ஷ்டம் அடிக்கும் என்றே தெரியாது. அப்படியொரு சம்பவம் தான் சீனாவில் நடந்துள்ளது. மத்திய சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில், வாத்து ஒன்றின் வயிற்றில் தங்கத் துகள்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த அசாதாரணக் கண்டுபிடிப்பு, அப்பகுதியில் முன்பு இருந்த தங்கச் சேகரிப்புப் பழக்கங்களைப் பலருக்கும் நினைவூட்டுவதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

வாத்துக்குள் தங்கம்
ஹுனான் மாகாணத்தின் லாங்ஹுய் கவுண்டி பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் இப்போது தான் வெளியாகியுள்ளது. லிவு என்ற கிராமவாசி, தனது வாத்தை உணவுக்காக அறுத்துள்ளார். அதன் கறியை வெட்டிக் கொண்டு இருக்கும்போது தான் அதன் இரைப்பையில் மிகச்சிறிய தங்கத் துகள்களைக் கண்டறிந்தார்.
இந்தத் துகள்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி, பரிசோதிக்கப்பட்டதில் அவை உண்மையான தங்கம் என்பது உறுதி செய்யப்பட்டது. சுமார் 10 கிராம் எடையுள்ள இதன் மதிப்பு சுமார் 12,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ₹1,65,821) என மதிப்பிடப்பட்டுள்ளது.
என்ன நடந்தது
அவர்கள் வாத்துகள் திறந்தவெளியில், தங்கப் படிவுகள் இருந்ததாகச் சொல்லப்படும் ஓர் ஆற்றுக்கு அருகில் வளர்கின்றன. வாத்துகள் அங்கிருந்து மண்ணை விழுங்கியிருக்கலாம், அதில் தங்கத் துகள்கள் இருந்திருக்கலாம் என லிவு நம்புகிறார். மனிதர்கள் அல்லது விலங்குகள் உட்பட யாருடைய உடலும் தங்கத்தைச் செரிக்கவோ அல்லது ஜீரணிக்கவோ முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். யாராவது தெரியாமல் தங்கத்தைச் சாப்பிட்டு இருந்தால் அது செரிமான மண்டலத்தின் வழியே தீங்கு விளைவிக்காமல் கடந்துவிடும். இருப்பினும், பெரிய துண்டுகளாக இருந்தால் அவை குடலில் அடைத்துக் கொண்டு தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கலாம்.
அதேநேரம் அங்கு இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லையாம். இதற்கு முன்பும் சில கிராமவாசிகள் வாத்துகளுக்குள் சிறிய அளவில் தங்கத்தைக் கண்டெடுத்துள்ளனர். இருப்பினும், தனது வாத்தில் தான் இந்தளவுக்கு அதிக தங்கம் இருந்ததாக லிவு தெரிவித்தார்.
அதிகாரிகள்
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “வாத்தில் தங்கம் இருப்பதாகச் சொன்னார்கள். அது உண்மையான தங்கம் தானா என்பதை உறுதிப்படுத்த ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அதேநேரம் இந்த பகுதியில் இதுபோல நடக்க வாய்ப்பு அதிகம். இங்குள்ள நீரில் தங்கத் துகள் உள்ளன. கடந்த ஆண்டு, இதே ஆற்றில் மணலை கழுவியபோது, கிராமவாசிகள் 10 கிராமுக்கு மேல் தங்கம் கண்டெடுத்தனர்” என்றார்.
அள்ளி செல்லப் போகும் அதிகாரிகள்
கவுண்டியின் சென்ஷுய் ஆறு வடக்கு தெற்கு நோக்கிப் பாய்கிறது. தங்கப் படிவுகளுக்குப் புகழ்பெற்ற இந்த நதியில் 1970கள் முதல் 1990கள் வரை மிகப் பெரியளவில் தங்கத்தைத் தேடும் பணிகளும் நடந்தது. அதன் பிறகு இந்த பகுதியில் தனி நபர்கள் தங்கச் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட அரசு தடை விதித்தது. சீனச் சட்டப்படி, கனிமங்கள் உட்பட அனைத்து நிலத்தடி வளங்களும் அரசின் சொத்து.
அதாவது அந்த நிலத்தின் உரிமையாளர் நீங்களாகவே இருந்தாலும் கூட நிலத்திற்குக் கீழ் இருக்கும் எந்தவொரு விஷயமும் அரசுக்கே சொந்தமாகும். இதன் காரணமாக இப்போது வாத்தின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்ட தங்கமும் கூட அரசுக்குச் சொந்தமாக வாய்ப்பு இருக்கிறது. அந்த தங்கம் யாருக்குப் போகும் என்பது சட்டச் சிக்கல் நிறைந்தது தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/gold-in-duck-china-man-finds-gold-particles-worth-rs-1-6-lakh-inside-ducks-stomach-sparks-buzz-780767.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
