
Business
oi-Prasanna Venkatesh
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக மொத்த ஹார்முஸ் வழித்தடத்தையும் கடற்படை கொண்டு முடக்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து உலக அளவில் எண்ணெய் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் முக்கியமான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை 8 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ஒரு பேரல் 103 டாலரைத் தாண்டியது.
இதன் மூலம் கச்சா எண்ணெய் முக்கிய அளவீடான 100 டாலர் என்ற முக்கியமான கட்டத்தை மீண்டும் உடைத்து உயர துவங்கியுள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை விலை 111 டாலருக்கு மேல் சென்றிருந்த நிலையில், இப்போது மீண்டும் உயர்வு காணப்படுகிறது. இதன் மூலம் விரைவில் 120 டாலர் என்ற உச்ச விலையை தொடுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ஈரான் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் இருந்த நிலையில் தினமும் 5-15 கப்பல்கள் வெளியேறி வந்தது, புதிதாக உள்ளே செல்ல விரும்பும் கப்பல்களுக்கும் புதிய வழித்தடத்தை கொடுத்தது. ஆனால் தற்போது அமெரிக்க கடற்படை மொத்தமாக முடக்கும் காரணத்தால் ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் கூட வெளியேற முடியாத நிலை வந்துள்ளது.

டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை வார இறுதியில் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து டிரம்ப், ஹார்முஸ் நீரிணையில் அனைத்து கப்பல்களும் நுழையவோ வெளியேறவோ தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
அமெரிக்கா விளக்கம்
ஆனால் அமெரிக்க மத்திய தளபதி பின்னர் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தடை ஈரானுக்கு செல்லும் அல்லது ஈரானில் இருந்து வரும் கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மற்ற போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். இந்தத் தடை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 2 மணி) அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை போக்கு
கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை பெரும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் ஹார்முஸ் நீரிணையை தற்காலிகமாக மூடியது. இந்த வழித்தடத்தில் தான் உலகின் மொத்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை பயணிக்கிறது. இதனால் கடந்த மாதம் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 119 டாலரைத் தொட்டது. பின்னர் இரு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் விலை 92 டாலருக்குக் கீழ் வந்தது. தற்போது பேச்சுவார்த்தை தோல்வியால் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
போக்குவரத்து நிலை
போர் நிறுத்தம் ஏப்ரல் 22 வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது. சனிக்கிழமை அதாவது அமெரிக்கா – ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தை நடந்த நாளில் மட்டும் 17 கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளன. இயல்பான நிலையில் தினசரி 130 – 140 கப்பல்கள் கடக்கும். ஈரான் சில கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளித்து வருகிறது. ஆனால் இந்த அனுமதி முன் அனுமதி மற்றும் சோதனைக்கு உட்பட்டதாக உள்ளது.
இந்த நிலை உலக அளவில் எண்ணெய் விலையை பாதிக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலையை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும். தற்போதைக்கு சந்தை பதற்றத்துடன் காத்திருக்கும் நிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு நெருக்கடி
மத்திய அரசு இந்தியாவில் அனைத்து எரிபொருள்களின் விலையையும் உயர்த்தியுள்ளது, ஆனால் பெட்ரோல், டீசல் ரீடைல் விலையை மட்டும் உயர்த்தவில்லை, ஹய் ஸ்பீட் டீசல் முதல் விமான எரிபொருள் வரை, ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் மீதான வரி, செஸ் ஆகியவற்றையும் உயர்த்தியுள்ளது. ஆனால் மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல் வகைகள் மற்றும் சாதாரண டீசல் விலையை மட்டும் உயர்த்தவில்லை.
இதன் விலையும் 5 மாநில தேர்தல்கள் நடந்து முடிந்த பின்பு விலை உயர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார வல்லுனரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் தெரிவித்திருந்தார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/oil-prices-surge-over-8-to-103-barrel-as-trump-announces-naval-blockade-on-iran-s-strait-of-hormuz-789495.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


