“ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி..” கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் | Iran on Hormuz Passage: Tehran Demands $2 million Toll Per ship for safe passage amid Amid Blockade

International

oi-Vigneshkumar

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலந்சந்தியை சுற்றிலும் இப்போது பிரஷர் அதிகரித்துள்ளது. பல்வேறு கப்பல்கள் அங்கு வரிசையாகக் காத்திருக்கிறது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை மீதான தன் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் ஈரான் அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்கள் 18 கோடி ரூபாய் தனக்குச் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒரு பக்கம் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தீவிரமாக நடத்தி வரும் சூழலில், இன்னொரு பக்கம் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் அழுத்தத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.

Iran Israel Middle east

ஈரான் சுங்க கட்டணம்

இந்த நிலைமையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஈரான் முடிவு செய்துள்ளது. அதாவது ஹார்முஸ் ஜலசந்தியை மீதான தன் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த, சில கப்பல்கள் அதைக் கடந்து செல்ல சுங்க கட்டணத்தைப் போலத் தனியாக ஒரு கட்டணத்தை வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அதுவும் சிறிய தொகை இல்லை. கப்பல்களுக்கு 2 மில்லியன் டாலர் (அதாவது சுமார் ₹18.8 கோடி) கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. உலக கப்பல் போக்குவரத்தின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக ஹார்முஸ் ஜலசந்தி இருக்கும் சூழலில், அதைத் தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் மற்றொரு முயற்சியாகவே ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது.

ரூ.18 கோடி

இது குறித்து ஈரானின் நாடாளுமன்ற தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினர் அலாயுதீன் புருஜெர்டி கூறுகையில், “இது ஈரானின் பலத்தைக் காட்டுகிறது. 2 மில்லியன் கட்டணம் ஈரானின் சக்தியைக் காட்டுகிறது. அதேநேரம் போர் காரணமாக அரசுக்குச் செலவுகள் அதிகரித்துள்ளது. அதை சமாளிக்க இந்த கட்டணம் அவசியமானது.. அதேநேரம் இது ஈரானின் அதிகாரத்தையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது” என்றார்.

ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றிலும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு குழப்பங்கள் இருந்து வரும் சூழலில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. முதலில் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவதாக ஈரான் அறிவித்தது. அதேநேரம் இந்தியா உட்பட சில நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளித்திருந்தது. வழக்கமான கப்பல் போக்குவரத்து முடங்கியதால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயரத் தொடங்கியது.

பின்னணி

இதைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்போம் எனக் கூட்டாக அறிக்கை வெளியிட்டன. அதாவது போரில் நேரடியாக ஈடுபட மாட்டோம் என்ற போதிலும் சரக்கு கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கை எடுப்போம் என கூறியிருந்தது.

டிரம்ப்

இதற்கு நடுவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் எச்சரிக்கும் கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது ஹார்மஸ் நீரிணை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால், ஈரானின் மின் கட்டமைப்பு வசதிகளைத் தாக்குவோம் என டிரம்ப் அச்சுறுத்தினார். அவர் மேலும், “ஹார்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், ஈரானின் பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்குவோம்.. மிகப் பெரிய மின் திட்டங்களில் இருந்து தொடங்கித் தாக்கி அழிப்போம்” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே செல்கிறது. இருப்பினும், கப்பல்கள் மீதான தாக்குதல்களால் கிட்டத்தட்ட அனைத்து டேங்கர் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-on-hormuz-passage-tehran-demands-2-million-toll-per-ship-for-safe-passage-amid-amid-blockade-783635.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo