
International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: போருக்கு நடுவே ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் நம் நாட்டுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய், கியாஸ் தடைப்பட்டது. இந்நிலையில் தான் இந்திய கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நம் நாட்டுக்கு கப்பல்கள் வர தொடங்கி உள்ளன. இதனால் கச்சா எண்ணெய் – கியாஸ் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது.
உலக நாடுகளை பொறுத்தவரை இந்த ஜார்முஸ் ஜலசந்தி மிகவும் முக்கிய கடல் வழிப்பாதையாகும்.
ஈராக், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த வழியாக தான் உணவு பொருட்கள் செல்லும். அதேபோல் இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் வர்த்தகம் இந்த பாதை வழியாக தான் நடக்கும். இன்னும் சொல்லப்போனால் உலகளவில் நடக்கும் கச்சா எண்ணெய் – கேஸ் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கும்.
ஹார்முஸ் ஜலசந்தியால் பாதிப்பு
இந்தியா, சீனா உள்பட பல நாடுகளுக்கு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்டவை வரும். ஈரான் இந்த பாதையை மூடி உள்ளதாலும், மீறி பயணித்தால் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் கூறியதால் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் இடையே நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியிடம் பேசி வந்தார். முதல் 2 உரையாடல்கள் பலனளிக்காத நிலையில் நேற்று இரவு 3வது முறையாக இருவரும் பேசினர். இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளது.
ஈரான் அனுமதி
அதாவது நம் நாட்டில் நிலவும் சூழல் பற்றியும், நம் நாட்டின் வர்த்தகம் உள்பட அத்தியாவசிய சேவைகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி கடல்பாதை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து எவ்வளவு முக்கியத்தும் என்பது பற்றி ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இதை புரிந்து கொண்ட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி அரசின் பிற பிரதிநிதிகளுடன் பேசி அனுமதி வழங்கினார்.
இந்திய கப்பல்களுக்கு அனுமதி
அதன்படி போருக்கு மத்தியிலும் கூட இந்தியா கொடியுடன் செல்லும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கலாம் என ஈரான் அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக ‘புஷ்பக்’ மற்றும் ‘பரிமல்’ ஆகிய இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன.
இது நம் நாட்டுக்கு குட்நியூஸாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அரபு நாடுகளில் இருந்து தடைபட்ட கச்சா எண்ணெய் – கேஸ் சப்ளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். இதனால் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படும்.
அமெரிக்கா – இஸ்ரேலுக்கு தொடரும் தடை
அதேவேளையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதில் அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்களுக்கு தொடர்ந்து ஈரான் தடை விதித்துள்ளது. மீறி இந்த நாடுகளின் கப்பல்கள் அல்லது இந்த நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-war-iran-allows-indian-flagged-ships-to-pass-through-strait-of-hormuz-780661.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
