
Business
oi-Prasanna Venkatesh
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கியமான சரக்கு போக்குவரத்து வழித்தடமாக இருக்கும் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறந்தாலும், சர்வதேச எண்ணெய் சந்தையில் உடனடியாக அமைதி ஏற்படாது என்ற கருத்து நிலவி வருகிறது. இதற்கான காரணம் முன்வைக்கப்பட்டு உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், டிரம்ப் ஈரான் அரசை ஹார்முஸ் நீரிணையை திறக்க தினமும் கோரிக்கை வைத்தும், மிரட்டியும் வருகிறார்.
ஆனால் உண்மையில் ஹார்முஸ் நீரிணை திறந்துவிட்டால், உடனே பொருளாதாரம், வர்த்தகம், விலைவாசி சரியாகிவிடுமா..? எண்ணெய் விநியோகச் சங்கிலி ஒரு சிக்கலான செயல்முறை. ஹார்முஸ் திறந்த உடனே எண்ணெய் ஓட்டம் இயல்பாக திரும்பும் என எதிர்பார்ப்பது தவறான புரிதல்.

தற்போதைய நிலைமையில், உலகம் முழுவதும் இருக்கும் காலியான டாங்கர் கப்பல்கள் மீண்டும் மத்திய கிழக்கு பகுதிக்கு திரும்புவதற்கு குறைந்தது 25 முதல் 30 நாட்கள் ஆகும். அதன் பிறகு புதிதாக எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டோ அல்லது இருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யை கப்பலில் ஏற்றப்பட்டு மீண்டும் உலக சந்தைகளுக்கு திரும்ப மீண்டும் 25 முதல் 30 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
இதன் மூலம், எண்ணெய் விநியோகம் முழுமையாக இயல்புநிலைக்கு திரும்ப குறைந்தது 50 முதல் 60 நாட்கள் ஆகும் என கருத்து நிலவுகிறது. இதுவும் போர் பதற்றம் முழுமையாக குறைந்தால் மட்டுமே நடக்கும், அவ்வப்போது தாக்கல் இருந்தால் இந்த காலக்கட்டம் நீட்டிக்கப்படலாம். இதை கணக்கிட்டு தான் அமெரிக்கா கடந்த 3 நாட்களாக 45 நாட்கள் தொடர் போர் நிறுத்தம் கோரிக்கை உடன் ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் ஈரான் போர் நிறுத்தத்திற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
சந்தை எதிர்பார்ப்புகள் vs நிஜம்
பொதுவாக முதலீட்டு சந்தைகள் உடனடி தீர்வுகளை எதிர்பார்க்கும், ஆனால் விநியோக கட்டமைப்பு அதற்கான வேகத்தில் இயங்காது. இந்த இடைவெளி தான் விலை மாற்றங்களுக்கும், அதிர்வுகளுக்கும் நடக்க முக்கிய காரணமாக மாறுகிறது.
உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், உலகளாவிய அளவில் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை, மற்றும் பொருளாதார அழுத்தங்கள் தொடுவதற்கான வாய்ப்பு அதிகம்.
கோவிட் காலம்
இதே போன்ற சூழ்நிலை ஏற்கனவே உலகம் பார்த்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு COVID காலத்தில், OPEC+ நாடுகள் ஏப்ரல் மாதத்தில் தினசரி 10 மில்லியன் பேரல் உற்பத்தி குறைப்பை அறிவித்தன. ஆனால் அந்த முடிவு மே மாதத்தில் தான் அமலாக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த உற்பத்தி குறைப்பதற்கு முன்பே கச்சா எண்ணெய் விலை சந்தையில் பெரும் தடுமாற்றம் கண்டு வரலாற்றிலேயே முதன்முறையாக மைனஸ் 37 டாலர் வரை சரிந்தது.
விநியோகம், டெலிவரி நடவடிக்கைகள் தாமதமாக நடந்தால், சந்தை அதற்குள் கடுமையான மாற்றங்களை சந்திக்க நேர்ந்தது.
‘Breaking Point’ நோக்கி நகரும் சந்தை
இன்றைய சூழ்நிலையில், ஹார்முஸ் வழித்தடம் திறப்பு ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும், அதன் விளைவுகள் உடனடியாக சந்தையை அமைதிப்படுத்தாது. விநியோக தாமதம், எதிர்பார்ப்புக்கும்-நிஜத்திற்குமான இடைவெளி (உதாரணமாக இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் கப்பல் சீனாவிற்கு சென்ற சம்பவம்), மற்றும் வரலாற்று அனுபவங்கள் அனைத்தும் சேர்ந்து பார்க்கும்போது, கச்சா எண்ணெய் சந்தை ஒரு முக்கிய திருப்புமுனையை நோக்கி நகர்கிறது.
இதனால், முதலீட்டாளர்கள், தொழில்துறை நிறுவனங்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் இத்தகைய மாற்றங்களை உணர்ந்து செயல்படுவது அவசியம். இறுதியாக ஹார்முஸ் நீரிணை திறப்பது என்பது ஒரு தீர்வு அல்ல, ஒரு ஆரம்பம் மட்டுமே.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/even-if-strait-of-hormuz-reopens-tomorrow-oil-supply-wont-normalize-for-50-60-days-check-why-787667.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
