
Business
oi-Hema Vandhana
சென்னை: மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச சூழலால் சென்னையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.. 10 நாட்களைக் கடந்தும் சிலிண்டர் விநியோகம் செய்யப்படாததால் இல்லத்தரசிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். என்ன நடக்கிறது சென்னையில்?
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்ட சிலர், சிலிண்டர்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் சுமார் 5,000 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
இத்தகைய அதீத விலை உயர்வால் அன்றாட தொழிலை நடத்த முடியாமல் சென்னையில் உள்ள பல சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பெரும்பாலான கடைகளில் உணவுப் பட்டியலைக் குறைத்துவிட்டு குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே தயாரித்து வருகின்றனர்..
வணிக எரிவாயுவின் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலை தன்னிச்சையாகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இட்லி, தோசை மற்றும் பிரியாணி உள்ளிட்ட அனைத்து அடிப்படை உணவுகளின் விலையும் உயர்ந்துள்ளதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கள்ளச்சந்தையில் வணிக சிலிண்டர்
மற்றொருபுறம், கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்கப்படுவதைத் தடுக்கவும், வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. அரசு உரிய முறையில் தலையிடத் தவறினால், வெளி உணவுகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.
இருந்தாலும், கேஸ் தட்டுப்பாடு இல்லை என்று அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.. நேற்றுகூட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஒரு விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி, பொதுமக்கள் இதனை நம்பி அச்சப்பட தேவையில்லை, மாவட்டத்தில் போதிய அளவில் சிலிண்டர் கையிருப்பு உள்ள நிலையில், எவ்வித தடையுமின்றி விநியோகம் நடைபெற்று வருகிறது, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சிலிண்டர்களை எப்போதும் போல வழக்கமான முறையில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றெல்லாம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் சுணக்கம் நுகர்வோரை நிலைகுலையச் செய்துள்ளது.
குறிப்பாக வில்லிவாக்கம் மற்றும் வடபழனி போன்ற முக்கிய இடங்களில் முன்பதிவு செய்து 10 நாட்களைக் கடந்தும் இன்னும் சிலிண்டர்கள் வீட்டிற்கு வந்து சேரவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். விநியோகத்திற்கான ரகசிய குறியீட்டு எண் கைபேசிக்கு வந்த பிறகும், முகவர்கள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் முறையான பதில் அளிக்கப்படுவதில்லையாம்..
இதனால் காலி சிலிண்டர்களுடன் மக்கள் ஏஜென்சிகளுக்கு நேரடியாகச் சென்று முறையிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுக்றது.
10 நாட்கள் – புக்கிங் செய்தும் வராத கேஸ்
சர்வதேச அளவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் வரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களை முற்றிலும் முடக்கியுள்ளது. இதனால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் முன்பதிவு செய்கின்றனர். இதுவே விநியோகத் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஒரு ஏஜென்சி கையாளக்கூடிய அளவை விட 5 மடங்கு கூடுதல் பதிவுகள் குவிந்துள்ளதால் இந்தச் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும், பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி அனைவருக்கும் சிலிண்டர்கள் தடையின்றி வழங்கப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..!!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/lpg-cylinder-delivery-crisis-in-chennai-as-10-day-delay-leaves-housewives-stranded-788335.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
