
Business
oi-Prasanna Venkatesh
ஹார்முஸ் வழித்தடத்தை ஏற்கனவே ஈரான் – ஒமான் நாடுகள் கட்டுப்படுத்தி ஈரான் கச்சா எண்ணெய் கப்பல்கள் மட்டும் அனுமதித்து வந்த நிலையில், பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால் அமெரிக்கா தற்போது ஹார்முஸ்-ஐ மொத்தமாக எந்த கப்பலும் வெளியே வர முடியாதது போல் தனது கடற்படை கொண்டு முடக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அது அடுத்த சில மணிநேரத்தில் செயல்படுத்த டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ள வேளையில் சிகாகோ போராசிரியர் ஒருவர் உலக நாடுகளுக்கு பெரும் வார்னிங் கொடுத்துள்ளார்.
சிகாகோ பல்கலைக்கழக பொலிட்டிக்கல் சயின்ஸ் பேராசிரியரும், பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணருமான ராபர்ட் ஏ பேப், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் குறித்து அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கான சிகாகோ திட்டம் (CPOST) என்ற அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.

30 ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகள் மற்றும் முடக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் Robert A. Pape, ‘இந்த முறை வர்த்தக தடை மூலம் விலை உயர்வு மட்டும் பிரச்சனை அல்ல… பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும்’ என்று தெளிவாகக் கூறியுள்ளார். உலகப் பொருளாதாரம் இன்னும் 10 நாட்களுக்குள் முக்கியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு செல்லும் என கணித்துள்ளார்.
சப்ளை ஷாக் தொடக்கம்
ராபர்ட் ஏ. பேப் தனது அறிக்கையில், ‘எல்லோரும் இன்னும் கச்சா எண்ணெய் விலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது ஏற்கெனவே நடந்து முடிந்து பழைய செய்தியாகிவிட்டது’ என்று கூறியுள்ளார். தற்போது அமெரிக்கா அறிவித்துள்ள ஹார்முஸ் வழித்தட முடக்கும் என்பது வெறும் விலை அதிர்ச்சி அல்ல. இது உலக அளவில் பொருட்கள் விநியோக அமைப்பு முழுவதையும் பாதிக்கும் ஆரம்பக் கட்ட சப்ளை ஷாக் என்று அவர் விளக்குகிறார்.
முதலில் விலை உயர்வு, 2வது கட்டமாக பொருட்களின் இருப்பு அளவிலான பற்றாக்குறை, 3வதாக பொருளாதார சரிவு என்ற வரிசையில், நாம் இப்போது இரண்டாவது கட்டத்துக்கு சென்றுவிட்டோம் என்று ராபர்ட் தெரிவித்தார். இந்தக் கட்டத்தில் தான் பொருளாதார அமைப்பு உடையத் தொடங்கும் என்பதை அடித்துக்கூறுகிறார்.
காரணம் பொருட்களின் விலை உயரும் போத, வரி, செஸ், நாணய மதிப்பு சரி செய்வது போன்ற பல்வேறு வழிகளில் சரி செய்துக்கொள்ள முடியும். ஆனால் பொருட்களை சப்ளை குறைந்துவிட்டால் காசு இருந்தாலும் வாங்க முடியாது. இதனால் பெரும் நெருக்கடி உருவாக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் முக்கியமாக இருக்கும் கச்சா எண்ணெய் முடங்கினால் பொருளாதாரம் உடையும்.
ஹார்முஸ் பாதை
உலக அளவில் உற்பத்தியாகும் எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் வழியாகத்தான் செல்கிறது. இப்போது ஈரானும் அமெரிக்காவும் இந்தப் பாதையை முடக்கியுள்ள நிலையில், விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மட்டுமல்ல, எரிபொருள், உரம், பிளாஸ்டிக் உள்ளிட்ட நவீன உற்பத்தியின் அடிப்படைப் பொருட்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.
இந்த பொருட்களின் இருப்புகள் குறையத் தொடங்கியவுடன், இது விலை அதிகரிப்பு பிரச்சனை தாண்டி… பொருட்கள் பற்றாக்குறை பிரச்சனையாக மாறிவிடும் என்று ராபர்ட் பேப் எச்சரிக்கிறார். தொழிற்சாலைகள் விலை அதிகமானால் உற்பத்தியை குறைக்கும், ஆனால் பொருட்கள் வராமல் இருந்தால் முடங்கி நின்றுவிடும்.
1973 உடன் ஒப்பீடு
1973-ம் ஆண்டு உலக எண்ணெய் விநியோகத்தில் 7 சதவீதம் மட்டுமே பாதிக்கப்பட்டபோது, 90 நாட்களுக்குள் பற்றாக்குறை, மக்களுக்கு இருப்பில் இருக்கும் பொருட்களை பகிர்ந்து அளிப்பது, தொழில்துறை இயக்கம் முடக்கம் ஆகியவை ஏற்பட்டன. இப்போது பாதிப்பு அதைவிட பெரியது. உலகப் பொருளாதார அமைப்பு இன்று முன்பை விட இறுக்கமான நிலையில் உள்ளது. நாம் ஏற்கெனவே 45 நாளை கடந்துவிட்டோம். இன்னும் சில நாட்களில் பெரும் நெருக்கடி வரும் என ராபர்ட் தனது ஆய்வறிக்கையில் எச்சரிக்கிறார்.
ஆசியா முதலில் பாதிக்கப்படும். பின்னர் ஐரோப்பா. இறுதியில் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். பொருளாதாரம் முழுமையான திவால் ஆகாது, ஆனால் குறிப்பிடத்தக்க சரிவு நிச்சயம் என கூறுகிறார்.
அமெரிக்காவும் தப்பாது
அமெரிக்கா எண்ணெய் சுயசார்புடன் இருந்தாலும், உலகப் பொருளாதாரம் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. எனவே அமெரிக்கா பெரும் நெருக்கடியில் பணவீக்கம் அதிகரித்து அந்நாட்டின் பொருளாதார அதிர்ச்சியில் உள்ளது. இந்த நிலையில் ஆசியா, ஐரோப்பா முடங்கினால் அமெரிக்காவும் தப்பாது என்று ராபர்ட் பேப் விளக்குகிறார். விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்படும்போது, வர்த்தகக் பாதிப்பு, சப்ளை செயின் நெருக்கடி ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவுக்கும் பொருளாதார நெருக்கடி பாதிப்பு ஏற்படும்.
இதனால் விலை இனி பொருளாதாரத்தை தீர்மானிக்காது, பொருட்களின் இருப்பு தான் தீர்மானிக்கும்.

கண்காணிக்க வேண்டிய ஒன்று
பேப் ஒரு முக்கிய ஆலோசனையும் தந்துள்ளார். ‘அறிக்கைகளையோ, சந்தை ஏற்ற இறக்கங்களையோ கவனிக்க வேண்டாம். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை மட்டும் உன்னிப்பாக கவனியுங்கள்’ என்று அவர் கூறுகிறார். கப்பல் போக்குவரத்து மீண்டும் சீராகவில்லை என்றால், பொருளாதார அமைப்பு இன்னும் மோசமாகிவிடும்.
அமெரிக்க பத்திரச் சந்தைக்கு பெரும் சவால்
இந்த சூழலில் அமெரிக்க 10 ஆண்டு பத்திர லாப விகிதம் 8 சதவீதத்தை நோக்கி உயரும் அல்லது டாலர் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தனது பத்திரச் சந்தைக்கு நிதிபுழக்கத்தை கொண்டுவர பணம் அச்சிட்டு பத்திரங்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் ஆபத்தும் அமெரிக்காவுக்கு உள்ளது.
ராபர்ட் ஏ. பேப்பின் இந்த எச்சரிக்கை உலகப் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலை முன்வைக்கிறது. அமெரிக்கா ஹார்முஸ்-ஐ முடக்கினால் அடுத்த 10 நாட்களுக்குள் உலக சந்தையில் சப்ளை ஷாக்வேவ் உருவாகும். ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் வெறும் எண்ணெய் விலை உயர்வை மட்டும் ஏற்படுத்தாது. உலகம் முழுவதும் பொருட்கள் பற்றாக்குறை, தொழிற்துறை பாதிப்பு ஆகியவற்றை உருவாக்கும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/hormuz-blockade-triggers-global-supply-shock-warning-chicago-professor-robert-pape-predicts-shortag-789719.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.



