
International
oi-Hema Vandhana
சென்னை: உலகில் உள்ள ஊர்வன இனங்களில் மிகவும் ஆச்சரியமான மற்றும் அச்சமூட்டும் ஒன்றாக அனகோண்டாக்கள் விளங்குகின்றன. தென் அமெரிக்காவின் அடர்ந்த காடுகளிலும், சதுப்பு நிலங்களிலும் மறைந்து வாழும் இந்தப் பாம்புகள், அவற்றின் பிரம்மாண்டமான உடல் மற்றும் வேட்டையாடும் திறனுக்காக உலகத்தையே வியப்பில் ஆழ்த்துகின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் வெளியாகியுள்ள இந்த அனகோண்டா செய்திதான், சோஷியலில் செம வைரலாகி கொண்டிருக்கிறது.
அனகோண்டா பாம்புகளை பொறுத்தவரை, மற்ற பாம்புகளைப் போல நஞ்சு கொண்டவை கிடையாது. அதாவது, இவை கடித்தால் விஷம் ஏறாது. ஆனால், இவற்றின் பலமே அவற்றின் உடல் எடைதான். நீளத்தில் மற்ற பாம்புகள் சில இவற்றை விட அதிகமாக இருந்தாலும், எடையில் அனகோண்டாவே முதலிடம்.

பெண் அனகோண்டாக்கள், ஆண் பாம்புகளை விட அளவில் பெரியவை. ஒரு பெண் அனகோண்டா 15 அடிக்கும் அதிகமான நீளம் வளரக்கூடியது. இதன் கண்கள் மற்றும் மூக்குத் துளைகள் தலையின் உச்சியில் இருக்கும். இதனால், இது தண்ணீருக்கு அடியில் பதுங்கியிருக்கும்போது, மூச்சு விடுவதற்காகத் தலையை மட்டும் லேசாக வெளியே நீட்டிக்கொண்டு இரைக்காகக் காத்திருக்க முடியுமாம்..
உலகின் கனமான பாம்பு
இவற்றின் தாடைகள் மிகவும் நெகிழ்வானவை. தலையை விடப் பெரிய விலங்குகளையும் வாய் கிழிந்து விடாமல் அப்படியே விழுங்கும் சக்தி இதற்கு உண்டு.
இவை பெரும்பாலும் தென் அமெரிக்காவின் அமேசான் மற்றும் ஓரினோகோ போன்ற ஆற்றுப் பகுதிகளில் காணப்படுகின்றன. அமைதியாக ஓடும் ஆறுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இவை அதிகம் வசிக்கின்றன. அனகோண்டாக்களுக்கு நிலத்தை விட நீரில்தான் அதிக வேகம் கிடைக்கும்.
அதனால் இவை தனது வாழ்நாளில் பெரும்பகுதியை நீரிலேயே கழிக்கின்றன. பொதுவாக இவை தனியாக இருக்கவே விரும்பும். இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். மழை மற்றும் வெள்ளக் காலங்களுக்கு ஏற்ப இவை தங்கள் இருப்பிடங்களை மாற்றிக்கொள்ளும்.
மனிதனை விழுங்கும் அனகோண்டா
அனகோண்டாக்கள் தங்களுக்கு தேவையான உணவைத் தேடி அலைவதில்லை. மாறாக, தண்ணீருக்கு அடியில் அசைவற்றுப் பதுங்கியிருந்து, இரை அருகில் வரும்போது மின்னல் வேகத்தில் தாக்கிவிடுமாம்.. ஆனால் இவை கடித்து கொல்வதில்லை; மாறாக, தனது வலிமையான உடலால் இரையைச் சுற்றி வளைத்து இறுக்கும். இந்த அழுத்தத்தில் இரையின் மூச்சு நின்றுவிடும்.
மீன்கள், பறவைகள், ஆமைகள் முதல் பெரிய முதலைகள் (கெய்மன்), கேபிபாரா மற்றும் மான்கள் வரை எதையும் இவை விட்டுவைப்பதில்லை. ஒருமுறை பெரிய விலங்கை விழுங்கிவிட்டால், அதைச் செரிமானம் செய்ய வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் ஒரே இடத்தில் ஓய்வெடுக்கும். மனிதர்களை விழுங்கும் அளவுக்கு இவற்றின் தாடை அகலமானது என்பதால், இவை காட்டின் மிகப்பெரிய ஆபத்தாக கருதப்படுகின்றன.
குட்டி குட்டிப் பாம்புகள்
அனகோண்டாக்கள் மற்ற பாம்புகளைப் போல முட்டையிடுவதில்லை. இவை நேரடியாகக் குட்டிகளைப் பிரசவிக்கின்றன. ஒரு பெண் பாம்பு ஒரே நேரத்தில் 20 முதல் 40 குட்டிகள் வரை போடும். பிறந்தவுடனேயே இந்தக் குட்டிகள் தானாகவே வேட்டையாடும் திறனைப் பெற்றிருக்கும். இருப்பினும், சிறு வயதில் இவை கழுகுகள் மற்றும் பெரிய முதலைகளால் வேட்டையாடப்படும் ஆபத்து உண்டு.
மொத்தத்தில், அனகோண்டா என்பது இயற்கையின் ஒரு பிரம்மாண்டமான படைப்பு. மனிதர்களைத் தாக்குவது அரிதான ஒன்றாக இருந்தாலும், இதன் உடல் பலமும், யாராலும் நெருங்க முடியாத அதன் மர்மமான வாழ்க்கையும் இன்றும் மக்களை நடுநடுங்க வைக்கிறது….!!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/world-s-heaviest-green-anaconda-in-the-amazon-forest-and-the-15ft-anaconda-that-can-swallow-humans-w-787899.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
