
International
oi-Halley Karthik
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக, ஈரான் தனது 27வது அலைவரிசை தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இந்த போர் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் விரிவடைந்திருப்பதால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக, சவுதி, பஹ்ரைன், கத்தார், அரபு அமீரகம் உள்ளிட்ட பக்கத்து நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ இலக்குகள் குறி வைத்து தாக்கப்படுகின்றன. இந்த தாக்குதலை ஈரானின் அரசு செய்தி ஊடகமான பிரஸ் டிவி உறுதி செய்திருக்கிறது.

அமெரிக்க மையங்களுக்கு குறி
இந்த மோதலில், லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கமும், ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பியக்கமும் இணைந்திருக்கிறது. முன்னதாக நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், குவைத்தின் அல்-அடைரி பகுதியில் உள்ள அமெரிக்க ஹெலிகாப்டர் தளம் குறி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலின் போது, ஈரான் கடற்படையின் பாலிஸ்டிக் ஏவுகணைப் பிரிவு, ஹெலிகாப்டர் அசெம்பிளி மையங்கள், எரிபொருள் டாங்கர்கள் மற்றும் கட்டளைக் கட்டிடங்களைத் தாக்கி குறிப்பிடத்தக்க அழிவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கைபர் ஷெக்கான் ஏவுகணைகள்
தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஈரான் தனது 26வது கட்ட நடவடிக்கையை “யா ஹைதர் கர்ரார்” என்ற புனித குறியீட்டின் கீழ் தொடங்கியது. இந்தக் கட்டத்தில், க்ளஸ்டர் குண்டுகள் பொருத்தப்பட்ட கைபர் ஷெக்கான், இமாத் மற்றும் கத்ர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் வடக்கு முதல் தெற்கு வரை இலக்குகளைத் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளில்லா விமானங்கள்
இதனை தொடர்ந்து, ‘யா அமீர் அல்-மு’மினின்’ என்ற குறியீட்டின் கீழ் தொடங்கப்பட்ட 28வது கட்ட நடவடிக்கை, அல்-அஸ்ராக் விமானப்படை தளத்தின் உள்கட்டமைப்பை குறிவைத்தது. இந்தத் தளம் அமெரிக்க விமானப் பிரிவுகளின் முக்கிய மையமாகச் செயல்படுகிறது என்றும், ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதாகவும் பிரஸ் டிவி குறிப்பிட்டது.
பக்கத்து நாடுகள் மீது தாக்குதல்கள் ஏன்?
பக்கத்து நாடுகளில் தாக்குதல் நடத்தியது குறித்து ஈரான் விளக்கமளித்திருக்கிறது. குறிப்பாக குவைத்தில், ஒரு பில்டிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு காரணம், அந்த கட்டிடத்தில் அமெரிக்க படைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று கூறியிருக்கிறது. இந்த போர் தொடங்குவதற்கு முன்னர், குவைத்தில் உள்ள அமெரிக் ராணுவ தளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க வீரர்கள், தனியார் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்படியான ஒரு ஓட்டல் பில்டிங் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
டிரம்பின் எச்சரிக்கை
ஒரு பக்கம் ஈரான் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கையில், மறுபுறம் அதற்கு சரிசமமாக, ஹிஸ்புல்லா பிரானிட் முகாம்கள் மற்றும் நஹரியா நகரை நோக்கி ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது.
முன்னதாக இந்த போர் குறித்து பேசியிருந்த டிரம்ப், ஈரான் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ளும். மிச்சம் மீதி வைத்த இடங்களையும் நாங்கள் தாக்கி அழிப்போம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-launches-operation-true-promise-4-27-waves-of-retaliatory-strikes-hit-us-and-israeli-assets-779785.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
