
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: வளைகுடாவில் போர் தொடரும் சூழலில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுக்கு ஒரு ஒப்பந்தம் செய்ய அல்லது ஹார்முஸை திறக்க 48 மணி நேரம் மட்டுமே உள்ளது எனக் கூறியுள்ள டிரம்ப், தக்க முடிவை எடுக்கவில்லை என்றால் 48 மணி நேரத்தில் ஈரான் மீது முழுமையான நரகம் இறங்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்கிறது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் ஈரானும் கூடத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் வளைகுடா முழுக்க உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.

ஹார்முஸ்
இந்த போரினால் உலக நாடுகள் பாதிப்புகளை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. அதற்குப் பிரதான காரணமே ஹார்முஸ் ஜலசந்தி முடங்கி இருப்பது தான். ஹார்முஸ் முடக்கப்பட்டுள்ளதால் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளை இந்த ரூட் வழியாகவே நடக்கும் சூழலில், இதனால் பாதிப்புகள் மோசமாக இருக்கிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகள் இதன் பாதிப்பை நேரடியாக எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.
பிரஷர்
ஹார்முஸ் விவகாரத்தில் உலக நாடுகள் அமெரிக்காவுக்கு பிரஷர் போட்டு வருகிறது. எதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா இருக்கிறது. இந்தச் சூழலில் தான் ஈரானின் மின்சார கட்டமைப்பு மீதான தாக்குதல்களை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதற்குள் ஈரான் ஒப்பந்தம் போட வேண்டும் எனக் கடந்த மார்ச் 26ம் தேதி டிரம்ப் மிரட்டினார்.
48 மணி நேரம் டைம்
இதற்கிடையே 2 நாட்கள் மட்டுமே ஈரானுக்கு டைம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதற்குள் ஈரானுக்கு ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும் அல்லது ஹார்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்.. இல்லையென்றால் ஈரான் மீது நரகமே வந்து இறங்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில், “ஈரானுக்கு ஒரு ஒப்பந்தம் செய்யவும் அல்லது ஹார்முஸ் நீரிணையைத் திறக்கவும் நான் 10 நாட்கள் அவகாசம் கொடுத்தது நினைவிருக்கிறதா? நேரம் குறைந்து வருகிறது .. 48 மணி நேரத்தில் அவர்கள் மீது முழுமையான நரகம் இறங்கும்!” என்று அவர் நேரடியாக எச்சரித்துள்ளார். அதேநேரம் அமெரிக்காவின் இந்த டிமாண்ட்டை கடந்த மார்ச் 26ம் தேதியே ஈரான் நிராகரித்திருந்தது. அது ஒருதலைபட்சமானது மற்றும் அநீதியானது என்று சொல்லி ஈரான் நிராகரித்திருந்தது.
முரண்
இருப்பினும், ஈரான் அதிகாரிகள் தங்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவே டிரம்ப் கூறி வருகிறார். சமீபத்தில் கூட பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஈரான் அதிகாரிகள் தனது நிர்வாகத்தை அணுகி, கூடுதல் அவகாசம் கேட்டதாக டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ்ஸிடம் தெரிவித்தார். அவர் மேலும், “அவர்கள் என்னிடம் மிக மரியாதையுடன், ‘தயவுசெய்து எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். ஆனால், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால், நான் அவர்களின் மின் நிலையங்களை அழிப்பேன்,” என்று டிரம்ப் அப்போது குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், ஈரான் பேச்சுவார்த்தை நடைபெறுவதையே நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் காலக்கெடு நாளை ஏப்ரல் 6ம் தேதியோடு முடியும் சூழலில், அதன் பிறகு அமெரிக்கா என்ன செய்யும்.. எப்படித் தாக்குதல்களை நடத்தும் என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/trump-warns-iran-us-president-gives-iran-48-hour-deadline-to-reopen-strait-of-hormuz-amid-crisis-787221.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
