
International
oi-Vigneshkumar
காத்மண்டு: நேபாளத்தில் கடந்தாண்டு நடந்த ஜென் Z போராட்டத்திற்குப் பிறகு, நேற்றைய தினம் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அங்கு புதிய அரசை அமைப்பது யார் என்பதை முடிவு செய்யவே இந்த தேர்தல். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. அதில் இளைஞர்களின் ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
நம்மைச் சுற்றி இருக்கும் அண்டை நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கே இருந்து வருகிறது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு மோதல்கள் ஏற்பட்டன. அப்படி தான் நமது அண்டை நாடான நேபாளத்திலும் கடந்தாண்டு உள்நாட்டு மோதல் ஏற்பட்டது. அது நேபாளத்தையே முடக்கியது.

நேபாள போராட்டம்
இளம் தலைமுறை (Gen Z) இளைஞர்கள் வீதிக்கு வந்த சூழலில், மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்தன. அப்போது இருந்த சர்மா ஒலி அரசு சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், அப்படியே அரசுக்கு எதிராகவும் திரும்பியது.. இதனால் அப்போது இருந்த கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
நேபாள அரசியல்
இதையடுத்து 2025 செப்டம்பர் 12ம் தேதி முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக அவரே நேபாள அரசு வழிநடத்தினார். நேபாள வரலாற்றில் பிரதமராகும் முதல் பெண் இவராவார். இந்தச் சூழலில் தான் நேற்று வியாழக்கிழமை அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீத வாக்குப்பதிவு பதிவானது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
முன்னிலை
நேபாளத்தில் மாலை நிலவரப்படி, காத்மாண்டுவின் முன்னாள் மேயரான பாலேன் ஷா, ஜாப்பா-5 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். நான்கு முறை பிரதமராக இருந்த கே.பி. ஒலியின் கோட்டையிலேயே அவரை பாலேன் ஷா காலி செய்துள்ளார். உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி மாலை 4:19 மணி நிலவரப்படி, பாலேன் ஷா 6,551 வாக்குகளைப் பெற்றுள்ளார். சர்மா ஒலி 1,428 வாக்குகளையும் பெற்றுள்ளார். தொடர்ந்து ஷ்ரம் சம்ஸ்க்ருதி கட்சியின் சமீர் தமாங் 381 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.
இளைஞர் கட்சி
முன்னாள் ராப் பாடகரும் இளைஞர்களின் கட்சியை வழிநடத்தும் நபரான பாலதேந்திர ஷா தலைமையிலான ராஷ்டிரிய சுயந்தரக் கட்சி இப்போது வரை முன்னிலையில் இருக்கிறது. அக்கட்சி மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. பாலதேந்திர ஷா கட்சி 102 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறதுடன், ஏற்கனவே ஒரு தொகுதியில் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.
ககன் தாபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், பதவியை இழந்த பிரதமர் ஒலியின் சி.பி.என் (யு.எம்.எல்) கட்சி 9 தொகுதிகளிலும் முன்னிலை பெறுகின்றன. ரூகம் கிழக்கு தொகுதியில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (என்.சி.பி) ஒருங்கிணைப்பாளர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசண்டா’ 6,820 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார்.
நேபாள நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 165 பேர் நேரடியாகவும், 110 பேர் விகிதாச்சார பிரதிநிதித்துவம் மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/nepal-election-2026-first-election-since-gen-z-protest-counting-underway-rsp-party-is-in-the-lead-778973.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
