
International
oi-Vigneshkumar
சவுதி: மத்திய கிழக்கில் இப்போது வரலாறு காணாத அளவுக்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்குப் பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து உருவாகியுள்ள நிலையில், ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் அமெரிக்க முதலீடுகள் குறித்து மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளன. இது டிரம்பிற்கும் அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய பிரஷரை போடுவதாக இருக்கிறது.
இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 9வது நாளாகத் தொடர்கிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஒரு பக்கம் ஈரான் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. அதற்குத் துளியும் சளைக்காமல் ஈரானும் பதிலடி தாக்குதல்களை நடத்துகின்றன. இதனால் வரலாறு காணாத பதற்றம் உருவாகியுள்ளது.

வளைகுடா நாடுகள்
இதற்கிடையே சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் கத்தார் உள்ளிட்ட முக்கிய வளைகுடா நாடுகள், அமெரிக்காவுடனான தங்கள் முதலீட்டு வாக்குறுதிகள் மற்றும் ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளின் பொருளாதாரங்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், அவை இந்த முடிவை எடுத்துள்ளன!
வளைகுடா நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் சொன்னதாக இந்த தகவலை பைனாஸியல் டைம்ஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் பல நாடுகள் தற்போதைய ஒப்பந்தங்களில் “ஃபோர்ஸ் மஜூர்” (force majeure) பிரிவுகளைப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலால் ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைக்க, எதிர்கால முதலீட்டு உறுதிப்பாடுகளையும் அவை ஆய்வு செய்கின்றன.
அதென்ன ஃபோர்ஸ் மஜூர்
force majeure என்றால் ஒரு ஒப்பந்தம், இங்கு முதலீடு ஒப்பந்தம் மற்றும் உறுதிமொழியை நம்மால் கட்டுப்படுத்த முடியாத பெரிய சம்பவங்களால் செய்ய முடியாத நிலை வந்தால், அந்த பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுபடலாம் என்பதைக் குறிக்கும். அதாவது நம்மால் தடுக்க முடியாத காரணத்தால் முதலீடு செய்யவில்லை என்றால் அதற்குச் சட்ட ரீதியாகத் தண்டனை இல்லை என்பதே Force Majeure. இயற்கை பேரிடர், கொரோனா போன்ற சூழல், போர்க் காலங்களில் இந்த பிரிவைப் பயன்படுத்துவார்கள்.
யோசனை
இதனால் முதலீடுகள், விளையாட்டு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள், உலகளாவிய வணிகங்களுடனான தொடர்புகள் விற்பனை என பல்வேறு உறுதிப்பாடுகளைப் பாதிக்கலாம். வளைகுடா அதிகாரிகள் மேலும் கூறுகையில், “பல வளைகுடா நாடுகள், தற்போதைய ஒப்பந்தங்களில் ஃபோர்ஸ் மஜூர் பிரிவுகளைப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராயத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், நடப்பு மற்றும் எதிர்கால முதலீட்டு உறுதிப்பாடுகளையும் மறுபரிசீலனை செய்கின்றன” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையேயான போர், வளைகுடா பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து வருகிறது. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட முடங்கியுள்ளது. அந்த வழியாகச் செல்லும் பல கப்பல்கள் தாக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதித்து, கச்சா எண்ணெய் வருவாய் குறைந்துள்ளது.
பாதிப்பு
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள், தூதரகங்கள், உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை அதிகரித்துள்ளன. இதனால் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புச் செலவின அதிகரிப்பும், எரிசக்தி ஏற்றுமதிக் குறைவும் வளைகுடா அரசுகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உலகின் மிகப் பெரிய முதலீடு பண்ட்டை நிர்வகிக்கும் நாடுகளாக வளைகுடா உள்ளன. கடந்தாண்டு டிரம்ப் இங்கு வந்தபோது, அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் முதலீடுகளை உறுதியளித்திருந்தன. இப்போது அந்த முதலீடுகள் குறித்தே மறு ஆய்வு செய்து வருகின்றன. இந்த முதலீடுகளை வளைகுடா நாடுகள் மறுபரிசீலனை செய்வது டிரம்ப் மீது அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கண்டிப்பு
இதற்கிடையில், வளைகுடா தொழிலதிபர்களும் இந்த போரைக் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த போரைக் கண்டித்த துபாயைச் சேர்ந்த பில்லியனர் கலஃப் அஹ்மத் அல் ஹப்தூர், ஈரானைத் தாக்கும் முடிவு குறித்து கேள்வி எழுப்பினார். இது வளைகுடா நாடுகளை ஆபத்தில் தள்ளுவதாக விமர்சித்த ஹப்தூர், எந்த அடிப்படையில் இந்த ஆபத்தான முடிவை எடுத்தீர்கள் என்றும் இதன் பக்கவிளைவுகள் குறித்து யோசித்தீர்களா என்றும் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/gulf-countries-against-trump-saudi-uae-qatar-kuwait-eye-pulling-us-contracts-and-investments-779577.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
