
International
oi-Mani Singh S
தெஹ்ரான்: இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். இந்த நிலையில் புதிய தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி பதவியேற்றுள்ளார். ஸ்விஸ் வங்கியில் பணம், லண்டனில் பல ஆயிரம் கோடியில் வீடு என இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்ச அதிபர் கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பழி வாங்கும் நட வடிக்கையாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளது.

ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரானின் சட்டப்படி ஒரு தற்காலிகக் குழு நாட்டை நிர்வகித்து வந்தது. இதையடுத்து ஈரானின் நிபுணர்கள் அவை எனப்படும் உயர்மட்டக் குழு ஆலோசனை செய்தது. அதன்படி கொல்லப்பட்ட அயதுல்லா கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டார்.
56 வயதான மொஜ்தபா கமேனிக்கு, ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் அனைத்து அரசு விவகாரங்களிலும் முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. புதிதாக உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமேனியின் சொத்து மதிப்பு தொடர்பாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சொத்து மதிப்பு எவ்வளவு?
மொஜ்தபா கமேனியின் சொத்து மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. லண்டனில் புகழ்பெற்ற பிஷப் அவென்யூ பகுதியில் 1,100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடுகள் மற்றும் பாரசீகு வளைகுடா கப்பல் போக்குவரத்து தொழில், சுவிஸ் வங்கி முதலீடுகள் என மொஜ்தபாவுக்கு சொத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
இவை அனைத்து பினாமி பெயரிலேயே இருப்பதாகவும் புளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பா, வளைகுடா, வட அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் ஹோட்டல்கள் என சொத்து பட்டியல் நீள்கிறது. அதே நேரத்தில், ஈரானில் 1979 ஆம் ஆண்டு ஏழைகள் மற்றும் இஸ்லாம் என்ற பெயரில் மன்னராட்சியை கவிழ்த்த புரட்சியில் முக்கிய பங்கை உச்ச தலைவரின் குடும்பம் ஆற்றியது.
எளிய வாழ்க்கை வாழ்வதாக
மத கோட்பாட்டுக்கு கட்டுப்பட்டு கமேனியின் குடும்பம் எளிய வாழ்க்கை வாழ்வதாக ஈரான் அரசு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால், வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை பயன்படுத்தி அந்த குடும்பம் ஆடம்பரமான வாழ்க்கை நடத்தி வருவதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
மொஜ்தாபா கமேனிக்கு உள்ள அதிகாரம்
புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, ஈரான் ராணுவம் மற்றும் சக்திவாய்ந்த புரட்சிகரக் காவல்படையின் தலைமைத் தளபதியாகச் செயல்படுவார். அணு ஆயுதங்களை உருவாக்கப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பு மீதான முழு அதிகாரம் இனி இவரிடமே இருக்கும். நாட்டின் அரசியல் மற்றும் மத விவகாரங்களில் இவருடைய முடிவே இறுதியானது. மொஜ்தபா கமேனி தேர்வை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மொஜ்தபா கமேனி தேர்வு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அமெரிக்காவின் அங்கீகாரம் இன்றி அவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கையில் “ஈரானின் அடுத்த உச்ச தலைவராகப் பொறுப்பேற்பவர் யாராக இருந்தாலும், அவர் இஸ்ரேலின் இலக்காகக் கருதப்பட்டு அழிக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-leader-mojtaba-khamenei-wealth-in-spotlight-reports-claim-assets-in-swiss-banks-and-london-pro-779989.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
