
Tamilnadu
oi-Vishnupriya R
செங்கல்பட்டு: கடந்த 108 நாட்களில் சவுமியா உடலில் ஏதோ ஆவி புகுந்துவிட்டது என மாமல்லபுரத்தில் நடந்த ஒரு விழாவில் ராஜ்யசபா எம்.பி. அன்புமணி ராமதாஸ் கலகலப்பாக பேசியிருந்தார். இவர் பேச பேச சவுமியாவும் வெட்கத்தில் சிரித்து கொண்டே இருந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாமக மகளிர் சங்க மாநில பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அன்புமணியும், சவுமியாவும் கலந்து கொண்டனர்.

அப்போது அன்புமணி பேசிய போது நான் எங்கு போனாலும் சரி, பிரதமர் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் கூட, என்னிடம் பிறர் சொன்னது என்ன தெரியுமா? ஏங்க உங்களை விட உங்கள் மனைவி நன்றாக பேசுகிறார்கள்.
பெருமைதான்
நானும் ஆமாங்க அப்படித்தாங்கன்னு சொல்லிடுவேன். ஏனென்றால் எனக்கு பெருமையாக இருக்கும். அவர் கையில் ஒரு பிரச்சனையை எடுத்துவிட்டால் என்னை தூங்க விட மாட்டார். அதை முடிக்கும் வரை அவங்களுக்கும் தூக்கம் வராது.
108 நாளாக
நான் இத்தனை நாட்களாக அவரை பார்த்ததற்கும் கடந்த 108 நாட்களாக அவரை பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இந்த 108 நாட்களில் (தந்தையுடனான பிரச்சனை எழுந்ததை குறிப்பிடுகிறார்) அவர் உடம்பில் ஏதோ ஆவி புகுந்து விட்டது என நினைக்கிறேன்.
என்னை அழைப்பதில்லை
கட்சியினர் அழைக்கும் எல்லா திருமண விழாக்களும் செல்கிறார். அவருடன் எத்தனை பேர் போட்டோ எடுத்தாலும் எடுத்துக் கொள்கிறார். எனக்காவது என் கூட நிறைய பேர் கைகுலுக்கி போட்டோ எடுத்தால் கோபம் வரும். ஆனால் சவுமியாவுக்கு கோபமே வராது. அதனால் என்னை யாருமே கல்யாணத்திற்கு அழைப்பதில்லை. அவரைத்தான் அழைக்கிறார்கள்.
மனதில் பளு
எனக்கு நிறைய வேலை பளு இருக்கிறது. ஒரு பக்கம் இந்த பளு இருக்கிறது. இன்னொரு பக்கம் மனதிலும் பளு இருக்கிறது. 6 மாதங்களாக நடக்கும் விஷயங்களை என்னால் வெளியே சொல்ல முடியவில்லை. நல்லா இருந்த குடும்பத்தை பிரித்து குழப்பம் செய்தது திமுகதான்.
என் குடும்பம் என நான் சொல்வது கட்சியையும் சேர்த்துதான். தமிழகத்திற்கு கிடைத்த தீயசக்தி திமுக! எனவே நம் கோபத்தை எல்லாம், தேர்தலின் போது நாம் திமுக மீது காட்ட வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.
அன்புமணி பேச்சு
அவர் பேச்சில் கலகலப்பும் வேதனையும் அதிகமாகவே காணப்பட்டது. சவுமியா அண்மைக்காலமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதில் கலைஞர் உரிமைத் தொகை குறித்தும் டாஸ்மாக் குறித்தும் பேசி வருகிறார்.
டாஸ்மாக் வருமானம்
அதாவது மனைவிக்கு ரூ 1000 கொடுத்து, அதை கணவன் மூலம் டாஸ்மாக் வழியாக எடுத்துக் கொள்கிறார்கள் என விமர்சித்து வருகிறார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையும் சுட்டிக் காட்டி வருகிறார்.
ராமதாஸுடன் மோதல்
கடந்த ஆண்டு இறுதியில் இருந்து ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. தனது அக்கா காந்தியின் மகனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் நியமித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தது முதலே மோதல் வெளிப்படையாக வெடித்தது.
சின்னம் யாருக்கு
இது தற்போது கட்சியும் சின்னமும் அன்புமணிக்கு கிடைக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. அன்புமணி அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா எம்பியாகிவிட்டார். சட்டசபை தேர்தலிலும் கணிசமான இடங்களை பெற முயற்சித்து வருகிறார். இந்த தேர்தலில் சவுமியா போட்டியிடுவார் என தெரிகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/anbumani-ramadoss-joke-pmk-leader-s-funny-remark-about-sowmiya-draws-laughter-at-mamallapuram-event-780325.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
