
International
oi-Vigneshkumar
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் 2வது வாரமாகத் தொடர்கிறது. இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில், இதனால் சர்வதேச பாதிப்புகள் தொடர்கிறது. இதற்கிடையே தற்போதைய சூழலில் ஈரான் அரசு கவிழும் சூழல் தெரியவில்லை என அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. இதனால் போர் எப்போது முடியும் என்பதில் தெளிவு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என இரு நாடுகளும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக இடைவிடாமல் குண்டு வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இருப்பினும், ஈரான் அரசு இதுவரை சிதையாமல் நிலைத்திருக்கிறது. தற்போதைய சூழலில் ஈரான் அரசு கவிழும் சூழலில் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க உளவுத் துறை
இது தொடர்பாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஈரான் ஆட்சி வீழ்ச்சியடையும் ஆபத்தில் இல்லை. மக்கள் மீது இன்னுமே ஈரான் முழு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதே எங்கள் உளவுத் துறை ரிப்போர்ட்டாக இருக்கிறது” என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கடைசி ரிப்போர்ட் வந்துள்ளது. அதிலும் கூட இந்த தகவல்களே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் இந்த போர் தொடரும் சூழலில் இன்னொரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உச்சத்திற்குப் பறக்கிறது. இந்த பிரஷர் காரணமாகவே இந்த மோதலை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே இந்த ராணுவ நடவடிக்கையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதாக அதிபர் டிரம்ப் சுட்டிக்காட்டினார். அதேநேரம் ஈரானின் அடிப்படைவாத தலைவர்கள் இருக்கும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவருவது கடினம் தான்.
ஈரான் கண்ட்ரோல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கிய முதல் நாளே ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட போதிலும், ஈரான் அரசு ஒருமைப்பாட்டுடன் செயல்படுவதாகவே அமெரிக்க உளவுத் துறை தெரிவிக்கிறது. தற்போதைய சூழலில் ஈரான் அரசு வீழ்ச்சி அடைவது போலத் தெரியவில்லை என்பதை இஸ்ரேல் அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதேநேரம் ஈரானில் களநிலவரம் மாறிக் கொண்டே இருக்கும் சூழலில், நிலைமை இப்படியே இருக்கும் எனச் சொல்ல முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் இந்த ரிப்போர்ட்டிற்கு அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகமும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. வெள்ளை மாளிகையும் உடனடியாக எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. போர் தொடங்கிய நாள் முதல், அமெரிக்காவும் இஸ்ரேலும் வான் பாதுகாப்பு, அணுசக்தி தளங்கள், மூத்த தலைவர்கள் உட்பட பல ஈரான் டார்கெட்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பல காரணங்கள்
இந்த போருக்கு டிரம்ப் நிர்வாகம் வரிசையாக பல்வேறு காரணங்களைச் சொல்லி வருகின்றன. இந்த போர் நடவடிக்கை தொடங்கும்போது, “உங்கள் அரசை நீங்களே கைப்பற்றுங்கள் என்று” ஈரானியர்களை டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால், தலைமையைக் கவிழ்ப்பது தங்கள் நோக்கம் இல்லை என பிறகு டிரம்பின் ஆலோசகர்களின் விளக்கம் கொடுத்தனர்.
கமேனி மட்டுமின்றி, பல மூத்த அதிகாரிகளும், இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படையின் சில உயர்மட்ட தளபதிகளும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். கமேனி மறைந்த பிறகு பொறுப்பேற்ற நபர்கள் அரசின் மீதும் நாட்டின் மீதும் தங்கள் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.
பெரிய சிக்கல்
இதற்கிடையே மூத்த ஷியா மத தலைவர்களின் நிபுணர்கள் சபை, கமேனி மகன் மொஜ்தபாவை புதிய உச்ச தலைவராக அறிவித்தது. இருப்பினும், முந்தைய அரசின் எச்சங்கள் எதையும் இஸ்ரேல் விரும்பவில்லை என்றும் தாக்குதல்கள் தொடர இதுவும் ஒரு காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும், தற்போதைய சூழலில் ஈரான் அரசை எப்படிக் கவிழ்ப்பது என்பது இரு தரப்பிற்கும் தெரியவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஈரானுக்குள் மக்கள் வீதிகளில் பாதுகாப்பாகப் போராட வேண்டும் என்றால் அமெரிக்கப் படைகள் அதற்கு ஈரானுக்குள் இறங்க வேண்டும். ஈரானுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை டிரம்ப் நிர்வாகம் தொடக்கம் முதலே நிராகரிக்கவில்லை. இடையில் அண்டை நாடான ஈராக்கிலுள்ள குர்திஷ் போராளிக் குழுக்களை ஈரானில் அனுப்பும் திட்டம் குறித்துக் கூட ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும், குர்திஷ் போராளிகள் அவ்வளவு பலமான குழு இல்லை என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-intel-on-iran-regime-despite-us-israel-attack-no-collapse-risk-even-after-khamenei-death-780745.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
