
International
oi-Velmurugan P
தெஹ்ரான்: தனது எண்ணெய் வளங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் உள்பட உள்கட்டமைப்புகளை தாக்கினால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகளை ‘தீயிட்டுக் கொளுத்துவோம்’ என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, ஏற்கனவே பயணத்தில் உள்ள சில ரஷ்ய எண்ணெய்களை விற்பனை செய்ய அமெரிக்கா தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது. அதாவது மார்ச் 12ம் தேதி அதிகாலைக்கு முன்பே கப்பலில் ஏற்பட்ட எண்ணெய்களை விற்க அனுமதி அளித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் அந்த பிராந்தியத்தையே போரில் தள்ளியுள்ளன. எங்களிடம் இழப்பதற்கு எதிர்ப்பு இல்லை.. இனி நடப்பதை பாருங்கள் என்று ஆக்ரோஷமாக போரிட்டு வருகிறது ஈரான். ஈரானின் ஏவுகணைகள் சரமாரியாக வளைகுடாவின் எல்லா பகுதிகளிலும் விழுகிறது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையாக உயர்ந்தன. இந்தச் சூழலில், அமெரிக்க கருவூலத் துறை வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

ரஷ்யா எண்ணெய்க்கு அனுமதி
அதில், மார்ச் 12-ம் தேதி அதிகாலை 12:01 மணி அல்லது அதற்கு முன்பாகக் கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி ஏப்ரல் 11-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அமெரிக்க அரசால் அறிவிக்கப்பட்டுளளது.
அனுமதி அளித்து ஏன்
ஏன் அமெரிக்கா ரஷ்யா எண்ணெய்க்கு அனுமதி அளித்தது.. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடுமையாக தாக்கி வருகின்றன. இதனால் பதில் தாக்கு நடத்தி வருகிறது ஈரான்… இதனிடையே போரில் ஈரானின் எண்ணெய் கிணறுகள் மற்றும் எண்ணெய் வயல்களை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்கினால், பதிலுக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அத்தனை எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று ஈரான் மிரட்டி உள்ளது.
மொத்தமாக தீ வைத்து கொளுத்துவோம்
ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ எனப்படும் இராணுவ மத்திய செயல்பாட்டுக் கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் துறைமுகங்கள் மீது சிறிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டாலும், இந்தப் பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை நாங்கள் தீயிட்டுக் கொளுத்துவோம்,” என்று பகிரங்கமாக மிரட்டினார்.
அமெரிக்காவிற்கு பேரிழப்பு
அப்படி மட்டும் ஈரான் செய்தால், அமெரிக்காவிற்கு கற்பனை செய்ய முடியாத பேரிழப்பு ஏற்படும். வளைகுடா நாடுகள் எல்லாமே மோசமாக பாதிக்கப்படும். அமெரிக்காவிற்கு உதவியதற்காக மிகப்பெரிய சிக்கலில் சிக்கும் அபாயத்தில் வளைகுடா நாடுகள் தள்ளப்படும் நெருக்கடி உருவாகி உள்ளது. இதையடுத்தே ரஷ்யாவின் எண்ணெய்யை விற்க உலக நாடுகளுக்கு அமெரிக்க அனுமதி அளித்துள்ளது.
உச்சம் தொட்ட எண்ணெய் விலை
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஈரான் தனது ஆக்ரோஷமான பதிலடி கொடுத்து வருவதால், ஆகஸ்ட் 2022-க்குப் பிறகு முதல்முறையாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 9.2 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 100.46 டாலராக நிலைபெற்றது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலையான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI), 9.7 சதவீதம் உயர்ந்து 95.73 டாலராக அதிகரித்தது.
சரியும் பங்கு சந்தை
மத்திய கிழக்கில் போர் நீடிக்கும் என்ற அச்சத்தால் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஈரான் மீது தொடர்ந்த நிலையில், ஈரானின் பதிலடி நடவடிக்கையால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் பெரும்பாலான வர்த்தகங்கள் முடங்கியுள்ளன. இதனிடையே போரை தொடங்கி தலைவலியில் சிக்கியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதை விட, ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே தனக்கு முக்கிய முன்னுரிமை என்று கூறியது பங்குசந்தை முதலீட்டாளர்களிடையே மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/gulf-region-us-temporarily-allows-russian-oil-sales-following-iran-threats-780885.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
