
International
oi-Shyamsundar I
டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் (Supreme Leader) அரியணை ஏறிய கையோடு ஆற்றியிருக்கும் முதல் உரை, உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. “விபரீதம் இவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் முணுமுணுக்கும் அளவுக்கு, அவரது பேச்சில் அனல் தெறிக்கிறது. இதில் அவர் சொன்ன.. ஒரு முக்கிய எச்சரிக்கைதான் உலக நாடுகளை அதிர வைத்து உள்ளது.
தன் தந்தையை விடவும் தீவிரமான ‘ஹார்ட்லைனர்’ (Hardliner) என்பதை முதல் பந்திலேயே நிரூபித்திருக்கிறார் இந்தப் புதிய தலைவர். அமைதிப் பேச்சுவார்த்தை, தூதரக உறவு என்பதற்கெல்லாம் இடமே தராமல், நேரடியான போர்ப் பிரகடனத்தையே அவர் வாசித்திருக்கிறார்.

“வெளியேறு அல்லது அழி” – அமெரிக்காவுக்குக் கெடு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களையும் உடனடியாக மூட வேண்டும் என்பதுதான் அவரது முதல் கட்டளை. “இல்லையெனில் அந்தத் தளங்கள் தரைமட்டமாக்கப்படும்” என நேரடியாகவே மிரட்டல் விடுத்திருக்கிறார். இது வெறும் வாய்வார்த்தை அல்ல, ஒரு நீண்ட காலப் போருக்கு ஈரான் தயாராகிவிட்டதையே இது காட்டுகிறது.
சொத்துகளுக்குக் குறி: ஈரானின் ‘நஷ்ட ஈடு’ பாணி
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ‘எதிரி’ என விளித்துள்ள அவர், ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடாக சொத்துகளைக் கைப்பற்றுவோம் என்கிறார். “அவர்கள் தர மறுத்தால், அவர்களின் சொத்துகளை நாங்கள் பறிமுதல் செய்வோம். அது முடியாவிட்டால், அதற்கு இணையான மதிப்புள்ள அவர்களின் சொத்துகளை அழிப்போம்” என அவர் பேசியிருப்பது சர்வதேசப் பொருளாதாரச் சந்தையில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: உலகிற்கு ஆபத்து?
உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும் என அவர் பிடிவாதம் பிடிக்கிறார். இது உலக நாடுகளின் எரிசக்தி தேவையை முடக்கும் ஒரு தற்கொலை முயற்சி எனத் தெரிந்தும், அவர் இதில் உறுதியாக இருக்கிறார். மேலும், “எங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் யார் என்பதை அண்டை நாடுகள் தெளிவுபடுத்த வேண்டும்” என வளைகுடா நாடுகளுக்கும் ஒரு ‘செக்’ வைத்திருக்கிறார்.
“எதிரிக்கு அனுபவம் இல்லாத, அவர்கள் பலவீனமாக இருக்கும் புதிய முனைகளில் (Fronts) தாக்குதல் நடத்த ஆலோசனைகள் நடக்கின்றன. இதில் அவர்களுக்கு அனுபவம் இல்லாத ஆயுதத்தை பயன்படுத்துவோம். போர் நீடித்தால் இந்தப் புதிய முனைகள் திறக்கப்படும்!”
புதிய வியூகம்: முன்னறியாத தாக்குதல்கள்
மேற்கூறிய அவரது உரைதான் மிக முக்கியமானது. இதுவரை அமெரிக்கா சந்திக்காத புதிய களங்களில் போரைத் தொடங்க ஈரான் திட்டமிட்டு வருவதை இது உறுதிப்படுத்துகிறது. சைபர் தாக்குதல்கள் முதல் ஆளில்லா ஏவுகணைகள் வரை எதை வேண்டுமானாலும் ஈரான் கையில் எடுக்கலாம்.
சுருக்கமாகச் சொன்னால், இந்தப் புதிய தலைவர் அமைதியை விரும்பவில்லை; மாறாக ஒரு நீண்ட கால மோதலுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு ஆடுகளத்திற்கு வந்திருக்கிறார். தந்தையை விடவும் பிடிவாதமான, ஆக்ரோஷமான ஒரு தலைவரின் கீழ் ஈரான் நுழையும்போது, மத்திய கிழக்கில் ஒரு பெரிய போர் மேகம் சூழ்ந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
விஷயங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி மிக வேகமாக நகரப் போகின்றன!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/we-can-fight-in-the-front-you-can-not-even-imagine-says-iran-new-supreme-leader-780931.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
