
India
oi-Hema Vandhana
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் சினிமா படங்களையே மிஞ்சும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.. தனது சொந்த திருமண செலவுகளுக்காக பணம் தேவைப்பட்டதால், ஒரு கும்பலுடன் சேர்ந்து பூசாரி ஒருவரை கடத்தி “ஹனி ட்ராப்” செய்து பணம் பறித்த மணமகன், தனது திருமண மேடையிலேயே போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.. அப்போது மணப்பெண்ணின் நிலைமை அங்கிருந்தோருக்கெல்லாம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்திவிட்டது.. என்ன நடந்தது தெரியுமா?
போபால் நகரை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஆகாஷ் பாஜ்பாய்.. இந்த இளைஞரை உள்ளூர்க்காரர்கள் “பூரா ஹட்டி” என்று அழைக்கிறார்கள்.. இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன..

போபால் திருமணம்
இந்த நிலையில், ஆகாஷிற்கு அவரது வீட்டில் கல்யாணம் நிச்சயமாகி இருந்தது.. ஆனால், கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்த அவரிடம் போதிய பணம் இல்லை.. அதனால் மீண்டும குற்ற செயலில் ஈடுபட்டு, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டார்.. உடனே தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு சதித் திட்டத்தைத் தீட்டினார்..
இதற்காக அவர்கள் சஞ்சீவ் என்ற 26 வயது பூசாரியை தங்கள் வலையில் வீழ்த்தினர்.. ஒரு பெண்ணை துணையாக ஓரிடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பொய் சொல்லி, அந்தப் பூசாரியை ஒரு வீட்டிற்கு வரவழைத்தனர்.. அவர் அங்கு சென்றவுடன், ஆகாஷ் மற்றும் அவரது கும்பல் சஞ்சீவை சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கினார்கள்.. பிறகு பூசாரியை ஒரு ரூமில் அடைத்து வைத்து மிரட்ட தொடங்கினர்..
பூசாரி மிரட்டல் பணம் பறிப்பு
அந்த பூசாரி ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக பொய்யான பாலியல் புகாரைப் பதிவு செய்து விடுவோம் என்று கூறி, அவரிடம் பெரும் தொகையைக் கேட்டு மிரட்டினார்கள்..
உயிருக்கு பயந்து போன பூசாரியின் குடும்பத்தினர், உடனடியாக ஆன்லைன் மூலமாக 50 ஆயிரம் ரூபாயை அந்தக் கும்பலுக்கு அனுப்பினார்கள்.. இது தவிர, மேலும் 7.5 லட்சம் ரூபாயை தவணை முறையில் தர வேண்டும் என்று அந்தக் கும்பல் பூசாரியைக் கட்டாயப்படுத்தியது.. மொத்த பணம் கிடைத்ததுமே பூசாரியை அவர்கள் விடுவித்தனர்..
ஆகாஷூக்கு கல்யாணம்
இப்போது பணம் கிடைத்த குஷியில் ஆகாஷ் கல்யாணத்துக்கு ஜரூரான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார்.. ஆனால், விடுதலையான பூசாரியோ, பயந்து ஓடிவிடாமல், தைரியமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்துவிட்டார்..
புகாரை பெற்ற போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கினர்.. முக்கிய குற்றவாளியான ஆகாஷ் வீட்டையும் கண்டுபிடித்தனர்.. ஆனால் அன்றுதான் ஆகாஷூக்கு கல்யாணம்.. வீடு பூட்டப்பட்டு, அனைவரும் திருமணம் மண்டபத்தில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது..
மஞ்சள் பூசும் சடங்கு
உடனடியாகத் திருமண மண்டபத்திற்குள் போலீசார் நுழைந்தனர்.. அங்கு ஹல்தி என்ற மஞ்சள் பூசும் சடங்கில் மாப்பிள்ளை ஆகாஷ் முகமலர்ச்சியுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்.. அந்த சடங்கிலேயே அங்கேயே வைத்து மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்..
உடனடியாக விசாரணைக்கும் உட்படுத்தினார்கள்.. பூசாரியிடம் பறித்த பணத்தில் ஒரு பகுதியை தனது திருமணச் சடங்குகளுக்காக ஏற்கனவே செலவு செய்துவிட்டதாக ஆகாஷ் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்..
போலீசாரின் கஸ்டடிக்கு மாப்பிள்ளை சென்றுவிட்டதை அறிந்து பார்த்த மணப்பெண் கதறி அழுதார்.. கைகளில் மருதாணி (மெஹந்தி) வைத்திருந்த மணப்பெண், அழுதுகொண்டே போலீஸ் நிலையத்திற்கு ஓடி வந்தார்..
மணப்பெண் கதறல்
“இன்னும் 2 மணி நேரம் மட்டும் பொறுத்துக்கோங்க சார்.. எனக்கு தாலி கட்டிய பிறகு அவரை அழைத்துச் செல்லுங்கள்” என்று போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சினார்.. ஆனால், அவர் செய்த குற்றத்தின் தீவிரத்தைக் கருதி போலீசாரும் நீதிமன்றமும் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டனர்.. இதனால் அந்தத் திருமணம் பாதியிலேயே நின்றது..
இந்த சம்பவத்தில் ஆகாஷுடன் சேர்ந்து கடத்தலில் ஈடுபட்ட மற்ற கும்பல் உறுப்பினர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. திருமணத்திற்காக பூசாரியைத் திட்டமிட்டு கடத்திய இந்தச் சம்பவம் போபால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அத்துடன் கைகளில் மருதாணியுடன் மணப்பெண் கண்ணீரும் கம்பலையுமாக நின்றது அங்கிருந்த அனைவரையுமே கலங்கடித்துவிட்டது..!!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/please-leave-him-for-2-hours-sir-bride-begs-police-as-groom-is-arrested-during-wedding-luxury-hal-781233.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
