
International
oi-Rajkumar R
ஜெருசலேம்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் பல முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் அரசின் 200-க்கும் மேற்பட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய விமானப்படை கூறியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் விமானப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பல முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பெரும் பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை தொடங்கின. அதன் பின்னர் ஈரானும் பதிலடி நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

இதனால் கடந்த இரண்டு வாரங்களாக இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் பல முக்கிய ராணுவ மற்றும் அரசியல் இலக்குகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
200 இலக்குகள்
இஸ்ரேலிய விமானப்படை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. புலனாய்வு அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில், டஜன் கணக்கான போர் விமானங்கள் ஈரானின் பல பகுதிகளில் விரிவான தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் தாக்குதல்
ஈரானின் முக்கிய நகரங்களான தெஹ்ரான், ஷெய்ரஸ் மற்றும் அவாஸ் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தெற்கு ஈரானில் உள்ள ஷிராஸ் பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரித்து சேமிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு தளம் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், தெஹ்ரானில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளின் தளங்களும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானிலும் தாக்குதல்
மேற்கு ஈரானின் அஹ்வாஸ் பகுதியில் உள்ள ஈரான் ஆட்சி அமைப்புகளின் தலைமையகங்களும் இந்த தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், லெபனானிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகள் மீது பல கட்டங்களாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பெய்ரூட் மற்றும் பெக்வா வேலி உள்ளிட்ட பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுத கிடங்குகள் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயுத கிடங்குகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’
இதற்கிடையில், அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின் முதல் வாரத்திலேயே ஈரானில் 3,000க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ராணுவ நடவடிக்கையின் வேகம் குறையவில்லை என்றும், தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் பார்த்தால், ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/israel-strikes-200-targets-in-iran-as-us-backs-escalation-781219.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
