
India
oi-Vigneshkumar
கொல்கத்தா: தமிழ்நாடு உடன் மேற்கு வங்கத்திற்கான தேர்தல் தேதியும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தேர்தல் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே மேற்கு வங்கத்தில் முக்கிய உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ள மம்தா, வீதிகளில் இறங்கிப் போராடப் போவதாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு இந்த முறை ஏப்ரல் 23 மற்றும் 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மேற்கு வங்க தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகே, தேர்தல் ஆணையம் அங்கு சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அதிரடி உத்தரவு
எப்போதுமே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் முழு கண்ட்ரோலையும் தேர்தல் ஆணையம் எடுத்துக் கொள்ளும். பக்கச்சார்பு இல்லை என்பதை உறுதி செய்ய பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கும். அதன்படி இப்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் முதன்மைச் செயலர் நந்தினி சக்ரவர்த்தி உள்ளிட்ட மாநிலத்தின் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக 1993 பேட்ச் IAS அதிகாரி துஷ்யந்த் நாரியலாவை மாநில முதன்மைச் செயலராக நியமித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், நந்தினி சக்ரவர்த்தியைத் தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
போலீஸிசும் மாற்றம்
மேலும், மேற்கு வங்க டிஜிபி பியூஷ் பாண்டேவுக்கு பதிலாகச் சித்த நாத் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.. கொல்கத்தா காவல் ஆணையர் சுப்ரதீம் சர்காருக்கு பதிலாக அஜய் குமார் நந்த் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையம் மேற்கு வங்க உள்துறைச் செயலர் ஜகதீஷ் பிரசாத் மீனாவையும் நீக்கியது. ஞாயிறு இரவு மாநில அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், 1997 பேட்ச் IAS அதிகாரி சங்கமித்ரா கோஷ் என்பவரை உள்துறை விவகாரங்கள் முதன்மைச் செயலராக நியமிக்குமாறும் ஆணையம் உத்தரவிட்டது.
அதில் மேலும், “நீக்கப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடிவடையும் வரை எந்தத் தேர்தல் சம்பந்தப்பட்ட பதவிகளிலும் பணியமர்த்தப்படக் கூடாது” என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. பாஜக அரசு வளங்களைத் தவறாகப் பயன்படுத்தித் தேர்தலை வெல்ல முயல்வதாக திரிணமூல் எம்.பி. சதாப்தி ராய் சாடினார்.
போராட்டம்
அவர் மேலும், “பாஜக அனைத்து உத்திகளையும் பயன்படுத்தித் தேர்தலை வெல்ல முயல்கிறது. அரசு வளங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது. இதனாலேயே முதன்மைச் செயலர் நீக்கப்பட்டுள்ளார். ஆனால், இதெல்லாம் பலன் தராது. மக்கள் திரிணமூலுடன் இருக்கிறார்கள்” என்றார். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அவர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம்
அதேநேரம் மாநிலத்தின் நிலைமை ஆய்வு செய்த பிறகே இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையத்தின் உத்தரவுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், புதிய அதிகாரிகளும் தங்கள் பணியிடங்களில் இணைந்ததற்கான அறிக்கை இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியது.
நேற்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தான் தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டார். அப்போது மேற்கு வங்கத்தில் வன்முறையின்றி அமைதியாகத் தேர்தல் நடைபெறும் என்று அவர் உறுதியளித்திருந்தார். வன்முறையற்ற மேற்கு வங்க தேர்தலுக்காகவே உயர் காவல் அதிகாரிகள் உட்பட முக்கிய அதிகாரிகளை மாற்றியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/west-bengal-election-election-commission-transfers-bengal-officials-mamata-hits-streets-in-protest-781781.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
