
International
oi-Velmurugan P
நியூயார்க்: உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கடற்படை வைத்துள்ள அமெரிக்காவால் ஏன் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை பாதுகாக்க முடியவில்லை.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டில் அமெரிக்காவால் கொண்டுவர முடியவில்லை.. ஏன் எந்த நாடுமே அமெரிக்காவிற்கு ஈரான் விஷயத்தில் உதவ முன்வரவில்லை என்ற கேள்வி வரும்.. ஆனால் இதற்கு காரணம் அந்த இடத்தின் புவியியல் அமைப்பும், ஈரான் நடத்தும் போர் முறையும் தான் காரணம்.
அமெரிக்கக் கடற்படை உலகிலேயே மிகவும் வலிமையானது என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகப் பாதுகாப்பதில் உள்ள சிக்கல் என்பது ராணுவ பலத்தைப் பொறுத்தது அல்ல; அது அந்த இடத்தின் புவியியல் அமைப்பு (Geography) மற்றும் போர் வியூகம் சார்ந்தது ஆகும். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

ஹிட்லர் சரியாக கவனிக்கவில்லை
சின்ன நாடு தான் ஈரான்.. ஆனால் ஈரானை தாக்கி அழிக்க முடியாதததற்கு காரணம் அதற்கு இயற்கையாகவே அமைந்துள்ள பாதுகாப்பு தான். ரஷ்யா எப்படி குளிர் நிறைந்த பிரதேசம் என்று தெரியாமல் போய் ஜெர்மனியின் ஹிட்லர் படை போய் தோற்றதோ அதுபோல் அமைந்துவிடும். ரஷ்யாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பையும், கடுமையான குளிரையும் ஹிட்லர் சரியாகக் கணிக்கவில்லை. ஜெர்மனிய ராணுவம் ரஷ்யாவின் உட்பகுதிக்குள் செல்லச் செல்ல, அவர்களுக்கான உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இறுதியில் “ஜெனரல் வின்டர்” என்று அழைக்கப்படும் ரஷ்யக் குளிர் அவர்களை வீழ்த்தியது.
ஈரான் நிலப்பரப்பு ரஷ்யாவின் குளிருடன் ஒப்பிடலாம்
ஈரான் நிலப்பரப்பை ஹிட்லர் எதிர்கொண்ட ரஷ்யக் குளிரோடு ஒப்பிடலாம். ஏனெனில் ஈரானின் சாக்ரோஸ் மற்றும் அல்போர்ஸ் (Alborz) மலைத்தொடர்கள் ஒரு இயற்கையான மதில் சுவர் போன்றவை ஆகும். அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடோ ஈரானைத் தாக்க நினைத்தால், அவர்கள் கடற்கரையிலிருந்து முன்னேறி மலைகளைக் கடக்க வேண்டும். மலைகளில் பதுங்கியிருக்கும் ஈரானியப் படைகளைத் தாக்குவது தரைப்படைக்கு ஒரு நரகமாக மாறும்.
ரஷ்யா எல்லையில் என்ன நடந்தது
ரஷ்யா எப்படிப் பின்வாங்கிச் சென்று எதிரியைத் தனது பரந்த நிலப்பரப்பிற்குள் இழுத்து வந்து சாகடித்ததோ, அதே போன்ற ஒரு போர் முறையை ஈரான் பின்பற்றுகிறது. ஈரானின் முக்கிய நகரங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் எல்லாமே மலைகளுக்கு அடியிலும், பாலைவனங்களுக்குப் பின்னாலும் மறைக்கப்பட்டுள்ளன. எதிரி நாட்டு ராணுவம் உள்ளே நுழைய முயன்றால், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாத ஈரானியக் குழுக்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிவிடுவார்கள். பில்டப் அதிகமாக இருக்கிறதே என்கிறீர்களா. ஆம் சற்று பில்டப் அதிகம் தான்.. ஆனால் அதற்கு ஈரானின் வலிமை மட்டுமல்ல. இயற்கையே அவர்களுக்கு அரணாகவே இருப்பதே காரணம்.
ஈரான் ஏழு நாடுகளின் எல்லையை பகிர்கிறது
ஈரான் மொத்தம் 7 நாடுகளுடன் தனது நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. மேற்கில் ஈராக் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை எல்லையாக கொண்டுள்ளது. வடக்கில்: ஆர்மீனியா , அஜர்பைஜான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளை எல்லையாக கொண்டுள்ளது. கிழக்கில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை எல்லையாக கொண்டுள்ளது. வடக்கில் காஸ்பியன் கடல் மற்றும் தெற்கில் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய நீர் எல்லைகளையும் கொண்டுள்ளது.
புவியியல் அமைப்பு ஈரானுக்கு எப்படி சாதகம்
ஈரானை ராணுவ ரீதியாக வீழ்த்துவது ஏன் கடினம் என்பதற்கு அதன் நிலப்பரப்புதான் முக்கியக் காரணமாக இருக்கிறது. ஈரான் ஒரு தட்டு போன்ற அமைப்பு கொண்டது, அதன் விளிம்புகள் முழுக்க உயர்ந்த மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கிறது. சாக்ரோஸ் மலைத்தொடர் ஈராக்கிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய சுவரைப் போல நிற்கிறது. எந்தவொரு தரைப்படை ராணுவமும் இந்த மலைகளைக் கடந்து ஈரானுக்குள் நுழைவது என்பது தற்கொலைக்கு சமம் ஆகும். அதேபோல் அல்போர்ஸ் மலைத்தொடர் வடக்குப் பகுதியில் பாதுகாப்பைத் தருகிறது.
மையப்பகுதி பாலைவனம்
மலைகளைக் கடந்து உள்ளே நுழைந்தாலும், ஈரானின் மையப்பகுதி மக்கள் வாழத் தகுதியற்ற, வறண்ட தஷ்ட்-இ கவிர் மற்றும் தஷ்ட்-இ லூத் ஆகிய உப்புப் பாலைவனங்களால் ஆனது. எதிரி நாட்டு ராணுவங்கள் இந்த வெப்பத்திலும், பாதையற்ற இடங்களிலும் முன்னேறுவது மிகக் கடினம் ஆகும்.

ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு
ஈரான் பாரசீக வளைகுடாவின் நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. உலக எண்ணெய் வர்த்தகத்தின் நரம்பான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தன் மீது தாக்குதல் நடந்தால், இந்த ஜலசந்தியை மூடி உலகப் பொருளாதாரத்தையே ஈரான் முடக்க முடியும். ஈரானின் மலைப்பகுதிகள் மிகவும் கடினமான பாறைகளால் ஆனவை. ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் அணுசக்தி மையங்களை இந்த மலைகளுக்கு அடியில் ஆழமான சுரங்கங்களில் மறைத்து வைத்துள்ளது. நவீன ஏவுகணைகளால் கூட இந்த மலைகளைத் துளைத்து அந்த மையங்களை அழிப்பது கடினம் ஆகும்.
ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவால் ஏன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை
முதல் காரணம் புவியியல் அமைப்பு தான். ஹார்முஸ் ஜலசந்தி மிகவும் குறுகலானது. இதன் அகலம் வெறும் 33 கிலோமீட்டர் மட்டுமே.அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்கள் இந்தச் சிறிய பாதையில் செல்லும்போது, அவை எளிதாகத் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக மாறிவிடும்.ஈரானின் கரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மிகக் குறுகிய தூரத்தில் இருப்பதால், அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்கக் கடற்படைக்கு மிகக் குறைந்த நேரமே இருக்கும்.

திரள் தாக்குதல்
ஈரான் ஒரு மிகப்பெரிய கடற்படையை வைத்திருக்கவில்லை, ஆனால் ஆயிரக்கணக்கான சிறிய அதிவேகப் படகுகளை வைத்துள்ளது. ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கப்பலை நோக்கி நூற்றுக்கணக்கான சிறிய படகுகள் ஒரே நேரத்தில் வெடிகுண்டுகளுடன் வந்தால், அத்தனை படகுகளையும் ஒரே நேரத்தில் சுட்டு வீழ்த்துவது கடினம். இது “ஆயிரம் தேனீக்கள் ஒரு யானையைத் தாக்குவது” போன்றது.
கடல் கண்ணிவெடிகள்
ஹார்முஸ் ஜலசந்தி ஆழம் குறைவானது. ஈரான் மிக எளிதாக இதில் ஆயிரக்கணக்கான கடல் கண்ணிவெடிகளைத் தூவிவிட முடியும். அமெரிக்கக் கடற்படை எவ்வளவு நவீனமானது என்றாலும், இந்தக் கண்ணிவெடிகளை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து அகற்றுவது மிக நீண்ட காலமாகும். அதுவரை உலக எண்ணெய் வர்த்தகம் முழுமையாக ஸ்தம்பித்து போய்விடும்.
கரையில் இருக்கும் ஏவுகணைகள்
ஈரான் தனது மலைப்பகுதிகளில் மறைத்து வைத்துள்ள கடல்சார் ஏவுகணைகள் மிகப்பெரிய அச்சுறுத்தல். அமெரிக்கக் கப்பல்கள் ஜலசந்திக்குள் நுழையும்போது, ஈரானிய நிலப்பரப்பில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை எதிர்கொள்வது தொழில்நுட்ப ரீதியாக மிகப் பெரிய சவாலானது.
பொருளாதார விளைவுகள்
அமெரிக்கா நினைத்தால் ஈரானை ராணுவ ரீதியாக வீழ்த்த முடியும். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு சிறு மோதல் ஏற்பட்டால் கூட உலக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும். உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். இந்த “பொருளாதாரப் போரை” சந்திக்க அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகளுமே பயப்படுகின்றன.
யானை போன்றது அமெரிக்கா
தெளிவாக சொல்வது என்றால், அமெரிக்கக் கடற்படை ஒரு “யானை” போன்றது; அது ஆழ்கடலில் யாராலும் வெல்ல முடியாதது. ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஒரு “குறுகிய சந்து”. அந்தச் சந்திற்குள் ஈரான் ஒரு “தேள்” போல மறைந்திருந்து தாக்கக்கூடிய நிலையில் இருக்கிறது. பலத்தை விட அந்த இடத்தின் சூழல் ஈரானுக்குச் சாதகமாக இருப்பதால், அமெரிக்காவால் அங்கே முழுமையான கட்டுப்பாட்டைச் செலுத்த முடிவதில்லை. அதனால் தான் உலக நாடுகமே ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானை தாக்க கடற்படையை அனுப்பவில்லை.

சிலிண்டர் பஞ்சாயத்திற்கு என்ன காரணம்
இந்தியாவில் வீடுகளில் சிலிண்டர் பஞ்சாயத்துக்கு இவ்வளவு உலக அரசியல் தெரிய வேண்டியதிருக்கிறது. உண்மையில் நம்மூர் சிலிண்டர் பஞ்சாயத்து தீர வேண்டும் என்றால், கடைகளுக்கு சிலிண்டர் தட்டுப்பாடு சரியாக வேண்டும். அதற்கு கடை சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்யும் சிலிண்டர் ஏஜெண்டுகளை பிடித்து சிறையில் தள்ளுவதுடன் அவர்களிடம் உரிமையை ரத்து செய்ய வேண்டும். ஏனெனில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கடை சிலிண்டர் 4000 , 5000 என அநியாய விலையில் விற்கிறார்கள். இதுதான் சென்னை பகுதியில் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு முக்கியமான காரணம்..
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/the-us-navy-is-the-most-powerful-in-history-so-why-can-t-it-fully-protect-the-strait-of-hormuz-782081.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


