
International
oi-Vigneshkumar
பெய்ஜிங்: மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் 3வது வாரமாகத் தொடரும் சூழலில், அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. பல லட்சம் அப்பாவி பொதுமக்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஈராக், ஜோர்டான், லெபனான் மற்றும் ஈரானுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் வழங்கவுள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இப்போது நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. கமேனி மரணத்திற்கு பிறகும் கூட ஈரான் சரணடையாமல் விடாமல் போராடி வருகிறது. மேலும், அந்த பகுதியில் உள்ள பிற நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க பதற்றம் அதிகரித்துள்ளது.

தலையிட்ட சீனா
இதற்கிடையே இந்த விவகாரத்தில் சீனா தலையிட்டுள்ளது. போருக்குள் வரவில்லை என்றாலும் இந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவுள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது. ஈராக், ஜோர்டான், லெபனான் மற்றும் ஈரானுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் அறிவித்துள்ளார். அப்பகுதிகளில் உள்ள மக்களின் மனிதாபிமான துயரத்தைப் போக்குவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் முக்கியம்
சீனாவின் இந்த நகர்வு, வெறும் மனிதாபிமான ஆதரவு மட்டுமன்றி, பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, அப்பகுதியில் அதிகரித்து வரும் அழிவைத் தணிப்பதற்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
சீன செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஈரானுக்கு அவசர உதவி அனுப்பப்படும். லெபனான் உள்ளிட்ட பிற நெருக்கடிப் பகுதிகளுக்கும் இத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், சீனா இந்த விவகாரத்தைக் கவனமாகக் கையாண்டு வருகிறது. ராஜதந்திர ரீதியாகவும் மனிதாபிமான உதவி மூலமாகவும் சமநிலைப்படுத்த சீனா முயல்கிறது.
சீனாவின் நிலைப்பாடு
அதாவது மத்திய கிழக்கு மோதலில் இதுவரை சீனா தாக்குதலில் இறங்கவில்லை. அது ஈரானுக்கு ஆதரவாகக் கருத்து கூறியுள்ளது. தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதைத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. ஆனால், நேரடியாக இதுவரை ஈரானுக்கு எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. அதாவது அறிக்கை மூலம் கண்டித்தாலும் நேரடி உதவி இல்லை. இப்படி ஒரு சமநிலையைத் தான் சீனா கையாள்கிறது.
இந்த மத்திய கிழக்கு மோதல் எவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வருகிறதோ.. அவ்வளவு சீக்கிரம் சீனாவுக்கும் கூட நல்லது தான். ஏனென்றால் சீனப் பொருளாதாரத்திற்கு உயிர்நாடியான எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80%ஐ சீனா தான் வாங்குகிறது. உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஈரானுடன் மற்ற நாடுகள் வணிகம் செய்யாத நிலையில், சீனா தான் தொடர்ந்து வாங்கி வருகிறது.
உதவிகளோடு நிற்குமா?
எனவே, கச்சா எண்ணெய் சப்ளையில் ஏற்படும் நீண்ட கால பாதிப்பு சீனா பொருளாதாரத்தைக் கணிசமாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதன் காரணமாகவே நேரடியாக உள்ளே வராமல் சீனா விலகி இருந்தது. இந்தச் சூழலில் தான் சீனா இப்போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது மனிதாபிமான உதவிகளோடு நிற்குமா அல்லது அடுத்த கட்டத்திற்குச் செல்லுமா என்பதே இப்போது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/china-in-middle-east-crisis-emergency-aid-package-to-iran-jordan-lebanon-iraq-amid-tensions-782119.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


