
International
oi-Rajkumar R
டெல்லி: மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், ஈரான் நாட்டின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவை கைப்பற்றும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் அளித்துள்ள இந்த தகவல், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்மூஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்துக்கு ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சூழலில், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போர்க்கப்பல்களை அனுப்ப அமெரிக்கா முயன்றது.
இதற்காக நேட்டோ நாடுகளிடம் ஆதரவு கோரப்பட்டாலும், அதற்கு எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ட்ரம்ப், நேட்டோ நாடுகள் உதவவில்லை என்றால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், ஈரானின் பொருளாதார நரம்பாகக் கருதப்படும் கார்க் தீவை நேரடியாக குறிவைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்ற யோசனை அமெரிக்காவில் தீவிரமாக பேசப்படுகிறது. காரணம், அந்தத் தீவிலிருந்தே ஈரானின் சுமார் 90 சதவீத கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், இந்தத் தீவை கைப்பற்றினால் ஈரானின் வருவாயை நேரடியாக பாதிக்க முடியும் என அமெரிக்கா கருதுகிறது.
பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்த தீவு, ஹார்மூஸ் நிரிணை அருகே இருப்பதால், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்கனவே இந்த நீரிணையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கார்க் தீவைச் சுற்றியுள்ள எந்த ராணுவ நடவடிக்கையும் உலக எரிபொருள் சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரானில் பல இடங்களில் எண்ணெய் வளங்கள் இருந்தாலும், அவற்றை சேமித்து, சுத்திகரித்து, ஏற்றுமதி செய்யும் மையமாக கார்க் தீவு செயல்படுகிறது. பல்வேறு எண்ணெய் களங்களில் இருந்து பைப்லைன் மூலம் கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய் இங்கு சேமிக்கப்படுகிறது. அங்கிருந்து பெரும் எண்ணெய் கப்பல்கள் மூலம் சர்வதேச சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதனால், இந்தத் தீவு செயலிழந்தால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முறையே பாதிக்கப்படும்.
இந்த தீவின் முக்கியத்துவத்தை சர்வதேச உளவு அமைப்பான Central Intelligence Agency கூட பல ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டியுள்ளது. ஈரானின் பொருளாதாரத்துக்கும், ராணுவ நடவடிக்கைகளுக்கும் இந்த தீவு முக்கியமானது என அதன் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்கா இந்தத் தீவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது. ஈரான் பதிலடி நடவடிக்கையாக சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதற்கிடையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவேன் அசார், “ஈரானுக்குள் நேரடியாக நுழையும் நோக்கம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேல்க்கும் இல்லை. ஆட்சி மாற்றமே முக்கிய குறிக்கோள்” என தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து, நிலைமை இன்னும் எவ்வளவு சிக்கலாக மாறக்கூடும் என்பதைக் காட்டுகிறது. மொத்தத்தில், கார்க் தீவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த புதிய பதற்றம், மத்திய கிழக்கு அரசியல் மட்டுமின்றி, உலக பொருளாதாரத்தையும் நேரடியாக பாதிக்கும் சக்தி கொண்டதாக பார்க்கப்படுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/trump-eyes-iran-s-kharg-island-to-disrupt-global-oil-supply-782105.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


