
International
oi-Shyamsundar I
டெஹ்ரான்: கத்தார் நாட்டின் வடக்கே அமைந்துள்ள ராஸ் லாஃபான் (Ras Laffan) தொழில் நகரம், சாதாரணமான ஒரு இடமல்ல; அது உலக எரிசக்தி சந்தையின் இதயம். 14 ஆண்டுகள் கடின உழைப்பில் செதுக்கப்பட்ட உலகின் அதிநவீன எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் இது. ஆனால், நேற்று இரவு ஈரானால் ஏவப்பட்ட பேலிஸ்டிக் ஏவுகணைகள் அந்த இதயத்தைத் துல்லியமாகத் தாக்கியுள்ளன. உலகமே உற்றுநோக்கும் ஒரு பெரும் பதற்றம் இப்போது பாரசீக வளைகுடாவில் தொற்றிக்கொண்டிருக்கிறது.

என்ன நடந்தது ராஸ் லாஃபானில்?
உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி முனையமான இங்கு, ஈரானின் ஏவுகணைகள் விழுந்ததில் பல வசதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. நான்கு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டாலும், ஒன்று இலக்கை எட்டி பெரும் தீயை உண்டாக்கியுள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் அபுதாபியின் ஹப்ஷன் எரிவாயு நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. “இனி கத்தார் மீது கை வைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது” என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு ஏன் இந்த தலைவலி?
“கத்தாரில் குண்டு விழுந்தால் நமக்கென்ன?” என்று நாம் அசால்ட்டாக இருக்க முடியாது. காரணம், இந்தியாவின் எரிவாயு தேவையில் 40 சதவீதத்தை கத்தார் தான் பூர்த்தி செய்கிறது.
விலை உயர்வு: இந்தத் தடையால் சி.என்.ஜி (CNG) மற்றும் பி.என்.ஜி (PNG) விலைகள் கிடுகிடுவென உயரக்கூடும்.
விவசாயம் & உணவு: உரம் தயாரிப்பு செலவு அதிகரிப்பதால், மறைமுகமாக உணவுப் பொருட்களின் விலையும் ஏறும்.
மின்சாரம்: மின்சார உற்பத்தி செலவு கூடி, யூனிட் கட்டணங்கள் உயரும் அபாயம் உள்ளது.
$300 டாலர்… ஒரு நிழல் யுத்தம்!
தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 111 டாலருக்கு வர்த்தகம் ஆகிறது. ஆனால், சந்தை வல்லுநர்கள் கணிப்பது மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. நாம் 120 டாலர் விலையை பார்த்துப் பழகியிருக்கலாம்; ஆனால், இந்த போர் நீடித்தால் எண்ணெய் விலை 300 டாலரைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
இப்போதைய சூழலில், ஒருவரின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ‘ஆயில் எக்ஸ்போஷர்’ (Oil Exposure) எனப்படும் எண்ணெய் துறை சார்ந்த பங்குகள் இல்லை என்றால், அவர்கள் மிகப்பெரிய ரிஸ்க்கை எதிர்கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
சந்தையில் நிலவும் இந்த பதற்றம் இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. விநியோகம் சீரானாலும், இனி வரும் காலங்களில் எண்ணெய் விலைகள் ஒரு நிலையான உயர் மட்டத்திலேயே இருக்கும் என்பதற்கு இந்தத் தாக்குதல் ஒரு கட்டியம்.
இந்த ஆலைகள் ஏன் உலக அளவில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை சில முக்கிய காரணங்களாகப் பிரிக்கலாம். இது வெறும் ஒரு தொழிற்சாலை மட்டுமல்ல, உலக நாடுகளின் சமையலறை முதல் தொழிற்சாலைகள் வரை இயக்கும் ஒரு ‘எரிசக்தி மையம்’.
உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி முனையம்: கத்தாரின் ராஸ் லாஃபான் (Ras Laffan) முனையம் உலகிலேயே மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதித் தளமாகும். இங்கிருந்துதான் உலகின் 20% (ஐந்தில் ஒரு பங்கு) எரிவாயு சப்ளை செய்யப்படுகிறது.
14 ரயில்கள் (LNG Trains): இங்கு 14 பிரம்மாண்டமான ‘புரொடக்ஷன் ட்ரெயின்கள்’ உள்ளன. இதில் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு கோடிக்கணக்கான டன் எரிவாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை உலகத்திலுள்ள மொத்த இயற்கை எரிவாயு இருப்பில் சுமார் 10% இங்கே தான் உள்ளது.
இந்த ஒரே ஒரு வயல், அடுத்த பல தசாப்தங்களுக்கு உலகிற்குத் தேவையான எரிசக்தியை வழங்கும் வல்லமை கொண்டது. எனவே, இங்கு ஏற்படும் ஒரு சிறிய பாதிப்பு கூட உலகளாவிய தட்டுப்பாட்டை உருவாக்குகிறது. எரிவாயுவைத் தவிர, ‘ஹீலியம்’ (Helium) உற்பத்தியிலும் இது உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மருத்துவத் துறை (MRI ஸ்கேன்கள்) மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்குத் தேவையான ஹீலியம் சப்ளை பாதிக்கப்படும்போது, அது பல நாடுகளின் தொழில்நுட்பத் துறையையே முடக்கும். எரிசக்திப் போர் தொடங்கிவிட்டது… அதன் வெப்பம் நம் அடுப்பாங்கரை வரை உணரப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-attack-on-qatar-oil-facilities-will-change-the-whole-war-oil-price-and-market-782553.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
