
Business
oi-Rajkumar R
சென்னை: மத்திய கிழக்கு போர்ப்பதற்றத்தின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையையும் கடுமையாக உலுக்கியுள்ளது. ஒரே நாளில் முதலீட்டாளர்களின் செல்வத்தில் ரூ.12 லட்சம் கோடி வரை கரைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு மற்றும் உலகளாவிய அச்சம் காரணமாக சந்தையில் பெரிய அளவில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 2,496 புள்ளிகள் சரிந்து 74,207 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல் நிஃப்டி 50,775 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 23,002 அளவில் தள்ளாடியது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக இருந்த உயர்வு முழுவதும் ஒரே நாளில் கரைந்துவிட்டது.
இந்த கடும் வீழ்ச்சிக்கான முக்கிய காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வே பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் தீவிரமடைந்ததால், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரை தாண்டி, சில நேரங்களில் 110 டாலர் அளவுக்கும் உயர்ந்தது.

குறிப்பாக ஈரான் வளைகுடா பகுதிகளில் முக்கிய எரிசக்தி கட்டமைப்புகளை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியதும் சந்தையில் பதற்றம் அதிகரித்தது. மேலும் உலகளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழியான ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது முதலீட்டாளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. உலகின் மொத்த எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பகுதி இந்த வழியாகவே நடைபெறுகிறது. இதனால் சப்ளை பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், பங்குச்சந்தையில் வங்கி மற்றும் நிதி நிறுவன பங்குகள் அதிகமாக சரிந்தன. குறிப்பாக எச்டிஎஃப்சி, கோடாக், ஆக்சிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் 3% முதல் 5% வரை வீழ்ச்சி கண்டன. இதனால் சந்தையின் மொத்த மனநிலை மேலும் பாதிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை வெளியே எடுத்துவருவது கூட சந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாதம் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.77,000 கோடிக்கு மேல் இந்திய சந்தையிலிருந்து பணத்தை வெளியே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது சந்தையில் விற்பனை அழுத்தத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்காமல் வைத்திருப்பதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
அதிக வட்டி விகிதம் காரணமாக முதலீட்டாளர்கள் அமெரிக்க பாண்டுகள் போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாறுகின்றனர். இதனால் இந்தியா போன்ற உருவெடுக்கும் சந்தைகளில் முதலீடு குறைகிறது. மொத்தத்தில், மத்திய கிழக்கு போர், எண்ணெய் விலை ஏற்றம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுதல், உலகளாவிய பொருளாதார அச்சம் ஆகிய அனைத்தும் ஒன்றாக இணைந்து இந்திய பங்குச்சந்தையில் இந்த ‘பிளட்பாத்’ நிலையை உருவாக்கியுள்ளது. நிலைமை எப்போது சீராகும் என்பது இன்னும் தெளிவாக இல்லாத நிலையில், முதலீட்டாளர்கள் அச்சத்துடன் சந்தையை கவனித்து வருகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/stock-market-crash-wipes-rs-12-lakh-crore-amid-iran-war-782733.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


