
International
oi-Vignesh Selvaraj
தெஹ்ரான்: ஈரான் வான் பரப்பிற்குள் போர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படையின் F-35 Lightning II ரக போர் விமானம் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க விமான தளம் ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஒன்றில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என, இச்சம்பவம் குறித்து அறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது கடந்த மாதம் 28 ஆம் தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்தது. அதைத்தொடர்ந்து வளைகுடா பிராந்தியம் முழுவதும் மூண்டுள்ள போரில் ஈரானில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய தலைவர்களும் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், ஈரானின் வான்பரப்பில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்க விமானம் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறியதாக, சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர்களை சுட்டிக்காட்டி, ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க போர் விமானத்திற்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்ட தகவலில், ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது F -35 ரக விமானம் பாதிப்படைந்து இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலை தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், அதிலிருந்த விமானியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விமானத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், இது குறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டால், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மோதல் தொடங்கியதிலிருந்து, ஈரான் ஒரு அமெரிக்க விமானத்தை வெற்றிகரமாகத் தாக்கிய முதல் நிகழ்வாக இது அமையும். அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் போரில் F-35 ரக விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு விமானத்தின் மதிப்பும் 100 மில்லியன் டாலருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-f-35-makes-emergency-landing-after-suspected-iranian-fire-782785.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

