ஈரான் “அந்த” இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து | Global internet shutdown awaiting: Hormuz Blockade and Houthi Red Sea problem will create problem

International

oi-Vigneshkumar

தெஹ்ரான்: மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் போர் மோசமாகிக் கொண்டே போகிறது. ஏற்கனவே இதனால் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனால் உலக இணையச் சேவையும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் இடையே மூன்று வாரங்களாக நீடிக்கும் போர், தற்போது முடிவதாகத் தெரியவில்லை. ஏற்கனவே இந்த மோதலில் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அடுத்தகட்டமாக ஈரான் உலக இணையச் சேவையைக் கூட முடக்கலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது.

Global internet shutdown awaiting Hormuz Blockade and Houthi Red Sea problem will create problem

இணைய கேபிள்கள்

ஹார்முஸ் வழியே செல்லும் முக்கிய கடல்நீர் இணையக் கேபிள்களை ஈரான் துண்டித்தால் அது ஒட்டுமொத்த உலகையும் முடக்கிவிடும். ஹார்முஸ் முடங்கியதுடன், செங்கடலில் உள்ள பாப் எல்-மண்டேப் பகுதியும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி குழுக்கள் முடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. உலகின் டிஜிட்டல் ரத்த நானங்கள் எனப்படும் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் இந்த இரண்டு முக்கிய வழித்தடங்கள் தான் வழியாகவே செல்கின்றன. வீடியோ அழைப்புகள், மின்னஞ்சல்கள் முதல் வங்கிப் பரிமாற்றங்கள், செயற்கை நுண்ணறிவு சேவைகள் வரை உலக இணையத் தரவுகள் அனைத்தையும் இந்தக் கேபிள்களே சுமந்து செல்கின்றன.

நம்மில் பெரும்பாலானோர் இணையம் என்றாலே ஏதோ சாட்டிலைட் மூலமாகவே இயங்குவதாக நினைத்துக் கொள்வோம். ஆனால், உண்மையில் இதுபோல கடலுக்கு அடியில் போடப்பட்டு இருக்கும் கேபிள்கள் தான் இணையச் சேவைக்கு உயிர்நாடியாக இருக்கிறது.

அச்சுறுத்தல்

ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடல் கண்ணிவெடிகளைப் பதித்துள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்து இந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. இதற்கிடையில், செங்கடலில் ஏமனைச் சேர்ந்த ஹவுதி குழுக்கள் கடந்துசெல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், அந்த நீர்வழியும் அபாய மண்டலமாக மாறியுள்ளது. இந்த இரண்டுமே இங்குள்ள இணையக் கேபிள்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

செங்கடல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியே குறைந்தபட்சம் 20 கடல்நீர் கேபிள்கள் செல்கின்றன. செங்கடல் வழியாக 17 கேபிள்கள் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா இடையேயான இணையப் போக்குவரத்தில் முக்கியப் பங்கை வகிப்பதாக கேபாசிட்டி குளோபல் தெரிவிக்கிறது.. பாரசீக வளைகுடாவில் உள்ள கேபிள்களே இந்தியாவின் டேட்டா சேவைக்கு முக்கியமானதாக உள்ளதாக ‘டெலிகிராபி’ டேட்டா குறிப்பிடுகிறது.

சிக்கல் என்ன

அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐக்கிய அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் பெரிய டேட்டா செண்டர்களை உருவாக்க பில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளன. இந்தப் பிராந்தியத்தை அடுத்த ஏஐ மையமாக மாற்றுவதே அவர்களின் நோக்கமாகும். கடல்நீர் கேபிள்கள் தான் இந்த டேட்டா சென்டர்களை ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள சந்தைகள் மற்றும் அங்குள்ள யூசர்களுடன் இணைக்கின்றன.

தற்போது இரு வழித்தடங்களும் முடங்கியதால், பழுது நீக்கும் பணிகள் மற்றும் பராமரிப்பு கூட நடக்க முடியாமல் போய் உள்ளது. போர் நடந்து கொண்டு இருப்பதால் இந்த நேரத்தில் பழுது பார்க்கும் கப்பல்கள் அங்குச் செல்வது ஆபத்தில் முடியலாம். இதனால் கப்பல்கள் அப்பகுதிக்குள் செல்ல முடியாது. ஈரான் வேண்டும் என்றே கேபிள்களை துண்டிக்க வேண்டும் என இல்லை. எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு பெரிய விபத்து கூட இணைய இணைப்புகளை வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் கூட செயலிழக்கச் செய்யலாம்.

பல மாதங்கள்

கடந்த 2024ஆம் ஆண்டில் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது செங்கடலில் ஹவுதி தாக்குதல்கள் பல கேபிள்களைச் சேதப்படுத்தின. இதனால் ஆசியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இணைய வேகம் கடுமையாகக் குறைந்தது. அந்த மோதல்கள் முடிவுக்கு வந்து கேபிள்களை முழுமையாகச் சரி செய்யவே பல மாதங்கள் ஆனது. இப்போது ஆபத்து அதை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. அப்போதாவது வெறும் செங்கடல் கேபிள் மட்டுமே. ஆனால், இப்போது செங்கடல் உடன் சேர்ந்த ஹார்முஸ் கேபிள்களும் ஆபத்தில் உள்ளது. இதனால் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா எனப் பாதிப்பு மோசமாக மாறலாம்.

ஆபத்து

நியூயார்க் டைம்ஸ் தகவல்படி, ஹார்முஸ் ஜலசந்தியின் மிகக் குறுகிய இடத்தில் நீர் சுமார் 200 அடி ஆழம் மட்டுமே. இதனால் கேபிள்கள் ஆழமற்ற நீரில் அமைந்துள்ளன. ஈரான் இந்த கேபிள்களைக் குறிவைக்குமா என்பது தெரியவில்லை என்றாலும், ஒருவேளை தாக்கினால் அது உலகின் பெரும்பகுதியை முடக்கும். இப்போது அனைத்துமே இணையத்தில் இருப்பதால் இந்த சேதம் வெறுமான தொலைபேசிகள், இணையதளங்களுடன் நிற்காது.. வங்கிகள், பங்குச் சந்தைகள், மருத்துவமனைகள், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் எனப் பலவற்றையும் பாதிக்கும். வளைகுடா நாடுகள் முதலில் பாதிக்கப்படும் இந்தியாவிலும் கூட இணைய வேகம் குறையலாம்!

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/global-internet-shutdown-awaiting-hormuz-blockade-and-houthi-red-sea-problem-will-create-problem-782865.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo