
International
oi-Velmurugan P
தெஹ்ரான்: உலகில் கச்சா எண்ணெய் போக்குரவத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை ஆமோதிக்கும் வகையில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் பேசுகையில், போர் முடிவுக்கு வந்த பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் “புதிய விதிமுறைகள்” அமலுக்கு வரும் என்றும் கூறியிருக்கிறார்.
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கியமான கடல்வழிப் பாதை ஹார்முஸ் ஜலசந்தி. உலக எண்ணெய்யில் 20 சதவீதம் இந்த வழியாக செல்கிறது. இந்தியா போன்ற நாடுகள் அதிக அளவில் கேஸ், எண்ணெய் இறக்குமதிக்கு ஹார்முஸ் ஜலசந்தியை தான் பயன்படுத்துகிறது.

கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு
தற்போது அமெரிக்கா இஸ்ரேல் நாடுகள் ஈரானை தாக்கியதால், கோபம் அடைந்த ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளையும், எண்ணெய் கிணறு மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் தாக்குகிறது. அத்துடன் ஹார்முஸ் ஜலந்தியையும் மூடி வைத்துள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர மற்ற நாடுகள் செல்ல அண்மையில் தான் அனுமதி அளித்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் சிக்கல் அதிகமாக உள்ளது.
சுங்க கட்டணம்
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஈரான் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தனக்குக் கிடைத்துள்ள புதிய பிடியைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டும் நோக்கில் ஈரான் இந்த அதிரடி முடிவை எடுக்கக்கூடும் என்று தெரிகிறது.
ஈரான் விதித்த கட்டுப்பாடு
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தொடங்கியதில் இருந்து, தனது எதிரி நாடுகளுடனும் அவர்களது நட்பு நாடுகளுடனும் தொடர்புடையதாகக் கருதப்படும் கப்பல்களின் போக்குவரத்தை ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அவ்வப்போது தடுத்து வருகிறது. இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டை ஈரான் தளர்த்தவில்லை.
சட்டம் வருகிறது
இது தொடர்பாக ஈரானிய மாணவர் செய்தி நிறுவனத்தின் (ஐஎஸ்என்ஏ) தகவல்படி, கப்பல் போக்குவரத்து, எரிசக்திப் பரிமாற்றம் மற்றும் உணவு விநியோகத்திற்காக இந்த ஜலசந்தியைப் பயன்படுத்தும் நாடுகள், ஈரானுக்குக் கட்டணங்கள் மற்றும் வரிகளைச் செலுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை நாடாளுமன்றம் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
புதிய விதிமுறைகள்
இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் பேசுகையில், போர் முடிவுக்கு வந்த பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் “புதிய விதிமுறைகள்” அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மீது கடல்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதிக்க ஈரானால் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் திட்டம்
ஹார்முஸ் ஜலசந்தியை உத்தியாக பயன்படுத்தி, தங்களுக்கு எதிராகச் செயல்படும் மேற்கத்திய நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், அந்த நாடுகளின் கப்பல்கள் இந்த நீர்வழிப் பாதையைக் கடப்பதைத் தடுக்கவும் தங்களால் முடியும் என்று முகமது மொக்பெர் ஈரான் செய்தி நிறுவனம் வாயிலாக எச்சரித்துள்ளார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/a-golden-treasure-for-iran-plan-to-set-up-a-tollgate-for-ships-in-the-strait-of-hormuz-782935.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


