
International
oi-Shyamsundar I
பாக்தாத்: ஈராக் மண்ணிலிருந்து நேட்டோ (NATO) படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த ராணுவ ஆக்கிரமிப்பு, ஈரான் உடனான மோதல் முற்றிய நிலையில் வெறும் இரண்டே வாரங்களில் முடிவுக்கு வந்துள்ளது.
“வந்தோம்… பார்த்தோம்… கிளம்பிட்டோம்!” – இதுதான் இப்போது ஈராக்கில் நேட்டோ படைகளின் தற்போதைய ஸ்டேட்டஸ். சுமார் 20 ஆண்டுகளாக ஈராக் மண்ணில் முகாமிட்டிருந்த நேட்டோ (NATO) அமைப்பின் ஆலோசனை மற்றும் பயிற்சிப் படைகள், இப்போது ஒட்டுமொத்தமாக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறியுள்ளன.

நடந்தது என்ன?
கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு போர்க்களமாகவே மாறியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈராக்கில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் (Pro-Iran militias) சரமாரியாக ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின.
குறிப்பாக, பாக்தாத் விமான நிலையம் அருகே உள்ள ‘கேம்ப் விக்டரி’ (Camp Victory) தளம் கடந்த 20 நாட்களாகக் குறிவைக்கப்பட்ட நிலையில், “இனி இங்கே இருந்தால் உயிருக்கே உலைதான்” என்ற நிலைக்கு நேட்டோ தள்ளப்பட்டது.
ஈரானின் ‘செக்’ மேட்:
ஈராக் மண்ணிலிருந்து வெளிநாட்டுப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்பது ஈரானின் நீண்டகாலத் திட்டம். முக்கியமாக ஈராக் இனி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்ககூடாது . அதை காலி செய்ய வேண்டும் என்பது ஈரானின் திட்டம். அந்தத் திட்டத்திற்கு இந்த இரண்டு வார காலப் போர் ஒரு ‘ஷார்ட்கட்’ ஆக அமைந்துவிட்டது.
இந்த போரை பயன்படுத்தி ஈராக்கில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற ஈரான் காய் நகர்த்தி வந்தது. “கடைசி வெளிநாட்டு வீரர் வெளியேறும் வரை எங்கள் தாக்குதல் ஓயாது” என ஈரான் ராணுவம் மற்றும் ஆயுதக் குழுக்கள் விடுத்த மிரட்டல், நேட்டோவை யோசிக்க வைத்தது. விளைவு? நேட்டோவின் ஐரோப்பிய கமாண்டர் ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச் (Gen. Alexus Grynkewich), “ஈராக்கில் இருந்த அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக ஐரோப்பாவிற்கு மாற்றப்பட்டுவிட்டனர்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.
அமெரிக்காவின் அஸ்தமனம்
எங்கே போனார்கள்?: ஈராக்கை காலி செய்த நேட்டோ, இனி இத்தாலியின் நேபிள்ஸ் (Naples) நகரிலிருந்து தனது பணிகளைக் கவனிக்கும்.
ட்ரம்ப் பாணி விமர்சனம்: ஒருபுறம் படைகள் வெளியேற, மறுபுறம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ நாடுகளை “கோழைகள்” (Cowards) என்றும் “காகிதப் புலி” (Paper Tiger) என்றும் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார். “எங்கள் போருக்கு உதவாதவர்கள், இப்போது எண்ணெய் விலை ஏறுவதாகப் புலம்புகிறார்கள்” என்பது ட்ரம்ப்பின் லாஜிக்.
மீண்டும் வருவார்களா?: “இது தற்காலிகமான வெளியேற்றம்தான், போர் முடிந்ததும் வருவோம்” என்று நேட்டோ கூறினாலும், ஈரானின் பிடி இறுகியுள்ள சூழலில் பழையபடி அவர்கள் உள்ளே நுழைவது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இருபது ஆண்டுகால ராணுவ ஆதிக்கம், இரண்டே வாரப் பதற்றத்தில் காணாமல் போயிருப்பது உலக அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனை!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/usa-leaved-iraq-after-2-decades-of-war-iran-smart-move-against-trump-783083.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
