
Tamilnadu
oi-Vishnupriya R
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலுக்குள் பிறந்தநாள் கொண்டாடிய தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான சம்பவத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கோவில் நிர்வாகம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதற்காக கோவில் தனித்தனியே அறைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 3 ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் காத்திருப்பு அறையில் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் நடத்திய விசாரணையில், ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தின் மேலாளரான நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடியது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தனியார் நிறுவனத்திற்கு கோவில் நிர்வாகம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முதல்கட்டமாக அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பக்தர்கள் யாரும் இல்லாத நேரத்தில் பிறந்தநாள் கொண்டாடியதாக ஐயப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் இதில் கலந்து கொண்டவர்களுக்கு தண்டனையாக 3.3.2026 அன்றைய தினத்திற்கு சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் நிர்வாகம் சார்பில் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/private-security-firm-fined-1-lakh-after-birthday-celebration-video-inside-tiruchendur-temple-goes-783229.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
