
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: ஈரான் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. இந்த மோதலால் ஈரானில் உள்ள பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை அனுப்பி வருகிறது. இதற்கிடையே இக்கட்டான சூழலில் உதவியுள்ள இந்தியாவின் கருணையையும் மனிதநேயத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று ஈரான் பதிவிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஆரம்பித்த இந்த மோதல் முடிவுக்கு வருவதைப் போலத் தெரியவில்லை. ஒரு பக்கம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இன்னொரு பக்கம் ஈரானும் கூட துளியும் விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.

ஈரான்
இந்த மோதலால் ஈரானில் உள்ள பல லட்சம் அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்தியா சார்பில் உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த மோதலில் இந்தியா வழங்கிய உதவிக்கு ஈரான் மீண்டும் நன்றி தெரிவித்தது. இந்தியாவின் கருணையையும் மனிதநேயத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று ஈரான் பதிவிட்டுள்ளது.
இந்தியாவின் உதவிகள்
கடந்த சில ஆண்டுகளாகவே அண்டை நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது. “வசுதைவ குடும்பகம்”, அதாவது உலகம் ஒரே குடும்பம் என்ற கொள்கையின் கீழ் அண்டை நாடுகளுக்குத் தொலைதூர நாடுகளுக்கு மருத்துவ, அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி உதவி வருகிறது. அதன்படி கடந்த மார்ச் 18ம் தேதி போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு முதலில் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை அனுப்பி உதவியது. தொடர்ந்து மார்ச் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தினர், வளைகுடாப் போர்க் காலத்தில் ஈரானுக்கு ஆதரவாகத் தங்கம், வெள்ளி, பணத்தைத் தானமாக வழங்கி ஒருமைப்பாட்டைக் காட்டினர்.
தேங் யூ இந்தியா
இக்கட்டான நிலையில் இருக்கும் ஈரானுக்கு இந்தியா தொடர்ந்த உதவிகளைச் செய்து வருகிறது. போரில் எந்தவொரு நாட்டிற்கும் ஆதரவான நிலைப்பாட்டையும் இந்தியா எடுக்காத போதிலும், இதனால் பாதிக்கப்படு அப்பாவி மக்களுக்கு உதவும் வகையில் இந்த பொருட்களை அனுப்பி வருகிறது. இந்தச் சூழலில் தான் இதற்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பான இந்தியாவுக்கான ஈரான் தூதரகம், “இந்தியாவின் கருணையையும் மனிதநேயத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டோம். தேங் யூ” எனப் பதிவிட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்
மத்திய கிழக்கு போரைப் பொறுத்தவரை அது நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. இந்த போரினால் ஈரானில் 1,500க்கும் மேலானோர் பலியாகினர். ஈரான் தாக்குதல்களில் இஸ்ரேலில் 15 பேர் கொல்லப்பட்டனர். வெஸ்ட் பேங்க், வளைகுடா அரபு நாடுகளிலும் கூட இதனால் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்டிமேஷ்க் மருத்துவமனையும் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரான் குற்றம் சாட்டியது.நோயாளிகள், மருத்துவர்கள் வேறு நகரத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்த மோதல் ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கியும் திரும்பியுள்ளது. ஒரு பக்கம் ஈரான் இந்த ஜலசந்தியை முடக்குவதாக அறிவித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துள்ள சூழலில், டிரம்ப் நேரடியாகவே இதில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதாவது ஜலசந்தியில் வழக்கமான போக்குவரத்திற்கு அனுமதிக்கவில்லை என்றால் ஈரானின் மின்சார கட்டமைப்பைத் தாக்கி அழிப்போம் என மிரட்டல் கொடுத்தார். அவர் சொன்ன சில மணி நேரத்தில் ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-thanks-india-again-for-medical-aid-will-never-this-forget-kindness-amid-middle-east-crisis-783625.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


