
International
oi-Rajkumar R
கொழும்பு: மேற்காசியாவில் நீடித்து வரும் போர் பதற்றத்தின் தாக்கம் உலக நாடுகளில் தீவிரமாகப் பிரதிபலித்து வரும் நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை ஒரே நாளில் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புதிய விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398க்கும், டீசல் ரூ.382க்கும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக உலகின் முக்கியமான கடல் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நீரிணை வழியாக உலகின் பெரும்பாலான கச்சா எண்ணெய் கடத்தப்படுவதால், உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக பல நாடுகளில் எரிபொருள் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

இஸ்ரேல் ஈரான் போர்
இந்த சூழ்நிலையில், இலங்கையில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கடந்த வாரமே அந்த நாட்டின் அதிபர் அனுரகுமார திசநாயக எச்சரிக்கை விடுத்திருந்தார். மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படலாம் என்பதால், அதனை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் முதல் இலங்கையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
அனுரகுமார அரசு
குறிப்பாக, ஒரு வாரத்தில் நான்கு வேலை நாட்கள் மட்டுமே அமல்படுத்தப்படும் என்றும், பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் முறைக்கு மாற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியது. இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. மேலும், கடந்த வாரம் இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் 8 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதோடு, பெட்ரோல் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் முறையில் எரிபொருள் வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது.
இலங்கை பெட்ரோல் விலை
இந்த நடவடிக்கைகள் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க அரசு முயற்சி மேற்கொண்டது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மீண்டும் 25 சதவீதம் அளவுக்கு எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதற்கு முன்பு ரூ.317 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.82 உயர்த்தப்பட்டு ரூ.398 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.79 உயர்த்தப்பட்டு ரூ.382 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மண்ணெண்ணெய் விலை
அதுமட்டுமின்றி, மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.60 உயர்ந்து, தற்போது ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.255 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் மூலம் நாட்டில் எரிபொருள் பயன்பாடு 15 முதல் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக இலங்கை பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
திடீர் விலை உயர்வு
ஆனால், திடீர் விலை உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தினசரி பயணத்திற்கு வாகனங்களை பயன்படுத்தும் மக்கள் அதிக செலவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை அரசு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக எரிபொருள் நெருக்கடி
தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வழிகளை கடைப்பிடிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், எரிபொருளை பதுக்கி வைத்து கருப்புச் சந்தையில் விற்பனை செய்ய முயற்சிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை நீடித்தால், எரிபொருள் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் இலங்கையில் அடுத்த சில வாரங்களிலும் எரிபொருள் விநியோகம் மற்றும் விலை நிலவரம் அபாய கட்டத்தை எட்டலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/sri-lanka-petrol-price-hits-rs-398-after-sharp-hike-783631.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


