
Business
oi-Velmurugan P
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிவதால், வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் தங்க நகையை அடகு வைத்தவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். 1 லட்சம் கீழ பவுன் விலை இறங்கும் என்று சந்தோஷப்படுறாங்க. இப்போது தான் கோல்ட் லோன் திருப்பி வெச்சிருக்கேன். தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே. மீண்டும் திருப்பி வைக்க முடியாது என்று நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் விவாதமாகி உள்ளது.
தங்கம் விலை கடந்த மார்ச் 1ம் தேதி ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 200 ரூபாய் என்கிற அளவில் விற்பனையானது. அதற்கு முதல் நாளானா பிப்ரவரி 28ம் தேதி தான் ஈரானை இஸ்ரேல் அமெரிக்கா ஆகிய நாடுகள் தாக்கின. அதாவது போர் தொடங்கிய மறுநாள் இதுவரை இல்லாத உச்சமாக தங்கம் 1.26 லட்சத்தை கடந்தது.ஆனால் அதன்பிறகு சரசரவென தங்கம் விலை சரிய தொடங்கியது. அடுத்த ஒரு வாரத்தில் அதாவது மார்ச்7ம் தேதி அன்று ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 4000 என்கிற அளவில் சரிந்தது.

தங்கம் விலை இன்று என்ன
ஆனால் அதன்பிறகு சரியும் வேகம் அதிகரிக்க தொடங்கியது. மார்ச் 15ம் தேதி தங்கம் விலை ஒரு லட்சத்து 18 ஆயிரமாக குறைந்தது. மார்ச் 20ம் தேதிக்குள் தங்கம் விலைசரிவு புதிய உச்சம் பெற்றது. ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600க்கு வந்தது. அதன்பிறகு வெறும் 3 நாளில் கிராமுக்கு 1000 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது சவரனுக்கு 8000 ரூபாய் வரை சரிந்துள்ளது.இதனால் தங்கம் விலை இன்று 1,03,600க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 5360 ரூபாய் குறைந்துள்ளது. நாளையும் தங்கம் விலை குறையும் என்றே கூறப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சத்திற்கு கீழ் வந்துவிடுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே உள்ளது.
கச்சா எண்ணெய்
தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் என்கிற அளவில் வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. போர் முடிந்து கச்சா எண்ணெய்க்கு டிமாண்ட் குறைந்து இயல்பு நிலை திரும்பும் போது, மீண்டும் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு என்பதால் தங்கம் விலை அப்போது உயரும் என்று பல நிபுணர்கள் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்ல, கச்சா எண்ணெய்யை டாலரில் தான் வாங்கவேண்டும் என்பதால், டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது.
டாலரை சேமிப்பதால் சரிவு
இதனால் பலர் டாலரை சேமிக்கிறார்கள். இதனால் டாலரில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்தது. எல்லாம் தற்காலிகமானது என்றும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் போது, தங்கம் புதிய உச்சம் பெற்று, நிலை பெறும் என்று நகை வியாபாரிகளும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள். ஆனால் எதை பார்த்தும் முடிவு செய்ய வேண்டாம். உங்களுக்காக தோன்றுவதை செய்யுங்கள். யார் சொல்வதையும் கேட்டு முடிவு செய்ய வேண்டாம்.
நகை அடகு வைத்தவர்களுக்கு சிக்கல்
இதனிடையே தங்கம் விலை தொடர்ந்து கடுமையாக சரிந்து வருவதால், நகையை அடகு வைத்தவர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் தங்கத்தை பொறுத்தவர்கள், அடகு வைத்தவர்கள் எல்லாரும் கடந்த சில ஆண்டுகளாக மாற்றி வைத்து தப்பி வருகிறார்கள். வட்டி கட்ட முடியாத நிலையில், அப்படியே நகையை மாற்றிவைத்து என்றாவதுஒரு நாள் நகையை மீட்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இப்போது தங்கம் விலை கடுமையாக சரிந்து வருவதால் நகையை திருப்பி வைக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறைந்துவிடாதே தங்கம்
தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு கீழ் போனால் நகையை அடகுவைத்தவர்கள் வட்டி கட்டியே மறு அடகு வைக்க முடியும். வட்டி கட்டாமல் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்டி திருப்பாமல் இருந்தால் நகை ஏலத்திற்கு வந்துவிடும்.. இதனை குறிப்பால் உணர்த்தும் வகையில் வடிவேலு படத்தை இணைத்து நெட்டிசன் ஒருவர் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் 1 லட்சம் கீழ பவுன் விலை இறங்கும் என்று சந்தோஷப்படுறாங்க. இப்போது தான் கோல்ட் லோன் திருப்பி வெச்சிருக்கேன். தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே. மீண்டும் திருப்பி வைக்க முடியாது என்று நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் விவாதமாகி உள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/gold-price-drop-changes-gold-loan-borrowers-need-to-know-783787.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


