
International
oi-Velmurugan P
தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது. இதனால் அமெரிக்கா போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது. அதிபர் டிரம்ப் எப்படியாவது ஈரானிடம் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று முயன்று வருகிறார். இதனிடையே ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை எட்ட ஒப்புக்கொண்டுள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள் காட்டி ‘அல் அரேபியா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இது ஒரு முக்கியமான ராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அதில் சில “முக்கிய உடன்பாடுகள்” எட்டப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும், விரைவில் ஒரு தீர்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் நம்பிக்கையுடன் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் டிரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகனும் நெருங்கிய உதவியாளருமான ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரான் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
ஈரான் தரப்பு மறுப்பு
எனினும், ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம், அமெரிக்காவுடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்புகள் எதுவும் இல்லை என்று ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இது தூதரக ரீதியான தொடர்புகள் குறித்த முரண்பட்ட தகவல்களாக பார்க்கப்படுகிறது
ஐந்து நாள் அவகாசம்
“ஈரானுடன் நாங்கள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இந்த முறை அவர்கள் மிகவும் தீவிரமாக உள்ளனர்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்திற்காக ஐந்து நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவில் அனைவருக்கும் சாதகமான ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைக்கக்கூடும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
தாக்குதல்கள் ஒத்திவைப்பு
பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமாக பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர விரும்பிய டிரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாக முன்பு விடுத்த எச்சரிக்கையிலிருந்து பின்வாங்கியுள்ளார். ஏனெனில் அமெரிக்கா ஈரானின் மின் கட்டமைப்பைத்தாக்கினால் பதிலுக்கு இஸ்ரேலிய மின் நிலையங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள், கடல் நீரை குடிநீராக்கும் வளைகுநாடா நாடுகளின் மையங்கள் ஆகியவற்றை மொத்தமாக தகர்ப்போம் என்று ஈரான் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஈரான் அப்படி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை காலி செய்தால் பெரிய சிக்கல் ஏற்படும். அதேபோல் மின் கட்டமைப்பு குலைந்தாலும் வளைகுடா நாடுகள் மீண்டு வருவது கடினம்.
ஹார்முஸ் ஜலசந்தி
எல்லா சிக்கலுக்கும் ஹார்முஸ் ஜலசந்தி காரணமாக உள்ளது. ஈரானின் தாக்குதல்களால் தற்போது மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி, பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால் “மிக விரைவில் திறக்கப்படும்” என்று டிரம்ப் கூறியிருக்கிறார். உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுகிறது. இப்போது போர் காரணமாக அமெரிக்க நட்பு நாடுகளின் கப்பல்களை ஈரான் அனுமதிக்கவில்லை.. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/a-historic-shift-why-iran-finally-opened-its-doors-to-trump-after-25-days-tension-784033.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


