
International
oi-Mani Singh S
தெஹ்ரான்: ஈரான் மீதான தாக்குதலை ஒரு மாத காலம் நிறுத்த அமெரிக்கா 15 அம்ச திட்டத்தை ஈரானிடம் வழங்கியதாக தகவல் வெளியான நிலையில், அதனை ஈரான் ஏற்க மறுத்துள்ளது. டிரம்ப் தங்களுக்கு உத்தரவு போட முடியாது எனவும் நாங்கள் விதித்து இருக்க கூடிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்றும் ஈரான் கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா கடந்த மாதம் 28 ஆம் தேதி போர் தொடுத்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஏவுகணைகளையும், குண்டு மழைகளையும் பொழிந்தன. இந்த தாக்குதலில் ஈரானில் கடுமையான சேதம் ஏற்பட்டது. ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

எங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே
ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதால் அந்த நாடு சரண் அடையும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஈரான் தொடர்ந்து வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும், இஸ்ரேலையும் தாக்கி வருகிறது. அமெரிக்காவின் அதி நவீன ஆயுதங்களையும் தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தகர்த்தது. இதனால் போரின் உக்கிரம் நீடித்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது. அதேபோல, சண்டை நிறுத்தத்தை தொடர 15 அம்ச திட்டத்தையும் அமெரிக்கா முன்மொழிந்தது. ஆனால், அமெரிக்காவின் இந்த முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளது. தங்கள் நிபந்தனைகள் பூர்த்தி செய்தால் மட்டுமே தாக்குதலை நிறுத்துவோம் என்று கூறியுள்ளது.
அமெரிக்கா முடிவு பண்ண கூடாது
மேலும், போர்நிறுத்தத்திற்கான காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டிரம்ப், நிர்ணயிக்க முயல்வதைத் தெளிவாக நிராகரித்த ஈரான், அமெரிக்கா முன்வைத்த முன்மொழிவு “அதிகப்படியானது” என்று விமர்சித்துள்ளது. ஈரானின் அரசு தொலைக்காட்சியான பிரஸ் டிவி இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், போரை முடிக்க அமெரிக்கா முன்வைத்த திட்டத்தை ஈரான் ஆய்வு செய்துள்ளது.
ஆனால் அதன் நிபந்தனைகள் ஏற்க முடியாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மூத்த ஈரான் அதிகாரி கூறும் போது, அமெரிக்காவின் முன்மொழிவு பாசிட்டிவ் ஆக இல்லை எனவும், எனினும், இதனை ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். ஈரான் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:- போரை எப்போது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற முடிவு முழுவதும் ஈரானை சார்ந்தது.
நிபந்தனைகள் என்னென்ன?
எப்போது போரை முடிக்க வேண்டும் என்று அமெரிக்கா முடிவு செய்வதை ஈரான் ஏற்றுக்கொள்ளாது. எங்களின் நிபந்தனைகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே சண்டையை நிறுத்த சம்மதம் தெரிவிப்போம். அதில் முக்கியமான கோரிக்கைகளாக, ஈரான் சிலவற்றை முன்வைத்துள்ளது. அதாவது, ஹார்முஸ் ஜலசந்தியில் தங்களுக்கு உள்ள உரிமையையும் இறையாண்மையயும் அங்கீகரிக்க வேண்டும்.
போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு தர உத்தரவாதம் அளிக்க வேண்டும். இனி தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற உறுதியான உத்தரவாதம் தர வேண்டும். ஈரானுக்கு எதிரான போருக்கு மட்டும் அல்லாமல், பிராந்தியத்தில் செயல்படும் பிற எதிர்ப்பு குழுக்களுடன் நடைபெறும் மோதல்களும் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்படும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறியுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-rejects-us-ceasefire-terms-says-war-will-end-on-its-own-conditions-784403.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.



