
India
oi-Vigneshkumar
சண்டிகர்: நமது நாட்டில் மது விற்பனை என்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கிறது. இருப்பினும், அந்த கட்டுப்பாடுகளைப் பல காரணங்களுக்காக இப்போது பல்வேறு மாநிலங்களும் நீக்கி வருகிறது. இதற்கிடையே சண்டிகரில் புதிய கலால் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் கீழ் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்கெட்களிலும் கூட மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மதுபான கொள்கை என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. மாநில அரசுகளே இது சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுக்கிறது. இதற்கிடையே பஞ்சாப் மற்றும் ஹரியான தலைநகர் சண்டிகரில் மதுபான விற்பனை தொடர்பாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கலால் கொள்கை
அம்மாநில அரசு புதிய கலால் கொள்கையை அறிவித்திருந்த சூழலில், அதில் தான் இந்த புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய கலால் கொள்கை காரணமாக இனிமேல் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்கெட்களிலும் கூட மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மதுபான விற்பனை முறையில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருகிறது.
இது தொடர்பாகத் துணை ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ் வெளியிட்ட அறிவிப்பில், “இனி பொதுமக்கள் “தீகா” எனப்படும் மதுபானக் கடைகளை மட்டும் சார்ந்திருக்கத் தேவையில்லை. நகரின் சில பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பெரிய சூப்பர் மார்கெட்களிலும் இனி மதுபானம் கிடைக்கும். ஆனால் இதற்கு சில கடுமையான தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.
வழிகாட்டுதல்கள்
இந்த புதிய கொள்கையின் கீழ் மதுபானம் விற்க விரும்பும் நிறுவனங்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ₹3 கோடிக்கும் மேல் ஜிஎஸ்டி வருவாய் கொண்ட சூப்பர் மார்கெட்கள் அல்லது பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவை. இவற்றுக்கான பிரிவு 10பி-ன் கீழ் உரிமங்கள் வழங்கப்படும்.
நோக்கம்
சண்டிகரின் மதுபான சில்லறை விற்பனை முறையை நவீனமாக்குவதே இதன் நோக்கம் என அதிகாரிகள் கூறினர். ஆங்காங்கே இருக்கும் கடைகளில் அல்லாமல், ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறைப் பிரிவுகளில் மதுபானம் விற்பனையாகும் சர்வதேச நடைமுறைகளுக்கு இணங்க சிஸ்டத்தை மாற்றுவதே முக்கியம். இந்தக் கொள்கை மதுபானம் வாங்குதலை எளிதாக்கும் என்று துணை ஆணையர் குறிப்பிட்டார். குறிப்பாக, பாரம்பரிய மதுபானக் கடைகளுக்குச் செல்ல சங்கடப்படும் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் இதன் மூலம் ஈஸியாக மது வாங்க முடியுமாம்.!
அதேபோல மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நேரமும் நீடிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளின் இனி நள்ளிரவு வரை மதுபான விற்பனை செய்யலாம். அண்டை மாநிலங்களில் பின்பற்றப்படும் நேரங்களைக் கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாக சண்டிகர் அதிகாரிகள் தெரிவித்தனர்..
விளக்கம்
இப்போது நகராட்சியில் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் நான்கு மதுபானக் கடைகள் மட்டுமே இன்னும் ஏலம் விடப்படாமல் உள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அனைத்து கடைகளும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் செயல்படத் தொடங்குவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.. கடைகளுக்கு டெண்டர் கோர விரும்புவோர் எதிர்பார்க்கப்படும் ஆண்டு வருவாயில் 17% முன்பணமாகச் செலுத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.. இது ஒப்பந்தங்கள் பாதியில் கைவிடப்படும் அபாயத்தைக் குறைக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/chandigarh-new-excise-policy-allows-to-sell-liquor-at-petrol-pumps-malls-and-departmental-stores-784759.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
