
International
oi-Rajkumar R
மாஸ்கோ: இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் காரணமாக மேற்காசியாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பல உலக நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட நாட்டுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வந்த நிலையில், உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு பிற நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு இந்திய எரிபொருள் சந்தையில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசியப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான மோதல் பல வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் நிலைமை வான் – நிலப் பரப்பில் மட்டுமல்லாமல் கடல் போக்குவரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான கடல் பாதையாக விளங்கும் ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் ஈரான் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நீரிணை வழியாகச் செல்லும் சரக்கு கப்பல்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரான் போர்
மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது நட்பு நாடுகளின் கப்பல்களை அனுமதிக்க முடியாது என்றும், விதிகளை மீறினால் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, தங்களுக்கு நட்பு நாடுகளாக உள்ள சில நாடுகளுக்கு மட்டும் இந்த வழித்தடம் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த போரால் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கனவே உணரப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய்
வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சில நாடுகளில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சவால்கள் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் போன்ற நாடுகள், மாற்று வாய்ப்பாக ரஷ்யாவில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி தற்போதைய நிலைமையை சமாளித்து வருகின்றன.
ரஷ்யா தடை
அதே நேரத்தில், இந்தியாவில் தேவையான அளவு எரிபொருள் இருப்பு இருப்பதாக மத்திய அரசு தொடர்ந்து உறுதி அளித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு உலக சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசியாவில் நீடித்து வரும் போர் காரணமாக, உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தை சீராக வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி
இதன் அடிப்படையில், வருகிற ஏப்ரல் 1 முதல் பிற நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கவும், அந்நாட்டில் பெட்ரோல் விலைகளை கட்டுப்படுத்தவும் உதவும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ரஷிய துணைப் பிரதமர் அலெக்சாண்ட நோவாக் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்படுள்ளது.
இந்தியா கவலை
தற்போது ரஷ்யா தினமும் சுமார் 1,20,000 முதல் 1,70,000 பீப்பாய்கள் வரை பெட்ரோலை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த பெட்ரோல் ஏற்றுமதி அதிகமாக சீன, துருக்கி, சிங்கப்பூர் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நாடுகள் ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி வாடிக்கையாளர்களாக உள்ளன. இந்தியா ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் கூட்டாளி என்பதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு
ஏற்கனவே மேற்காசியப் போரின் காரணமாக உலகளாவிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய முடிவு சர்வதேச சந்தையில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டு வருகின்றனர். ரஷ்யாவின் இந்த திடீர் முடிவு உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவை அதிகமாகச் சார்ந்துள்ள இந்தியா, மாற்று ஆதாரங்களை தேடும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/russia-halts-petrol-exports-india-faces-possible-fuel-price-surge-785069.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
