
India
oi-Rajkumar R
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவியின் வங்கி கணக்கில் திடீரென பத்து கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கில் மட்டுமே பணம் வங்கி கணக்கில் இருக்கும் நிலையில் திடீரென இவ்வளவு பெரிய தொகை வந்திருப்பதை கண்டு அந்த குடும்பமே இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் எடுத்த முடிவு தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மைன்புரி மாவட்டம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசித்து வரும் சீதா என்ற பெண்ணின் வங்கிக் கணக்கில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீதாவுக்கு பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. வழக்கம்போல் அவரது மகன் அருண் குமார் ஏடிஎம் மையத்துக்கு சென்று பின் எண்ணைப் போட்டு, கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்க்க முயன்றுள்ளார்.

அப்போது திரையில் தெரிந்த தொகையை பார்த்ததும் அவர் நம்ப முடியாமல் சில நொடிகள் அதிர்ச்சியில் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், அந்த கணக்கில் ரூ.9,99,49,586 இருப்பதாக திரையில் காட்டியது. சாதாரணமாக விவசாயத்தை நம்பி வாழும் அந்த குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய தொகை இருப்பது எப்படி என்று புரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
“நான் ஏடிஎம் சென்று இருப்புத் தொகையை பார்த்தேன். அப்போது சுமார் 9 கோடிக்கும் மேல் இருப்பதாக திரையில் காட்டியது. இது யாருடைய பணம் என்று எங்களுக்கு தெரியவில்லை. வங்கி திறந்ததும் நேரில் சென்று விசாரிக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் அருண்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள சீதா “எங்கள் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த பணம் யாருடையதோ அவர்கள் வந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கு இதிலே எந்த உரிமையும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார். அதேபோல், அவரது கணவர் பார்ஜான் கூறும் போது, “நாங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் குடும்பம். இவ்வளவு பெரிய தொகைக்கு எங்களுக்குச் சம்பந்தமே இல்லை. வங்கி திறந்ததும் சென்று இதை பற்றி தெரிவித்து, தேவையான நடவடிக்கை எடுக்க சொல்லப் போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தில் இருப்புத் தொகை காட்டும் காட்சியை பதிவு செய்த அந்த வீடியோ பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதை பார்த்து வங்கி கணக்குகளில் இத்தகைய தவறுகள் எப்படி நடக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தான் இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளும் விளக்கம் அளித்துள்ளனர். வங்கி நிர்வாகம் கூறுகையில், இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கடன் கணக்கும் இருந்ததால், கணினி பிழை காரணமாக இந்த தொகை தவறாக காட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், வங்கி திறந்த உடனே சம்பந்தப்பட்டவர்கள் கிளைக்கு வந்து இருந்தால், இந்த பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கிக் ணக்கில் இவ்வளவு பெரிய தொகை வரவு வைக்கப்பட்டும், அந்த பணத்துக்கு ஆசைப்படாமல் வங்கி அதிகாரிகளே எடுத்துக் கொள்ளட்டும் என கூறிய விவசாயியின் குடும்பத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/rs-10-crore-credited-by-mistake-woman-alerts-bank-immediately-785669.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

