
Tamilnadu
oi-Vishnupriya R
காரைக்குடி: காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக களம் இறங்கிய திருமாவளவன் வென்றால் சிதம்பரம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் செலவை அவர் ஏற்பாரா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் நேற்று தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

முதல் நாளான நேற்று 573 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில் சீமானும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சிதம்பரம் எம்பியாக இருக்கும் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் ஏன் போட்டியிடுகிறார். அந்த முடிவை அவர் ஏன் எடுத்தார் என எனக்கு தெரியாது.
ஒருவர் இரு தொகுதிகளில் போட்டி போடுவதை நான் எதிர்த்தேன். வசந்தகுமார் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த போது கன்னியாகுமரி எம்பி தேர்தலில் நின்றார். ஏன் கன்னியாகுமரியில் நிற்பதற்கு உங்கள் கட்சியில் வேறு ஒருவரே இல்லையா என கேட்டேன்.
ஒருவர் இரு பதவிக்கு போட்டி போடும் போது ஜனநாயகத்தில் இன்னொருத்தருக்கு அந்த வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது. 2 பதவியில் இருக்கும் போது ஒரு பதவியை வைத்துக் கொண்டு மற்றொரு பதவியில் இருந்து விலகும் போது வலுக்கட்டாயமாக ஒரு தேர்தல் திணிக்கப்படுகிறது.
இந்தியா போன்ற ஏழை நாடு, வளரும் நாட்டில் 28 சதவீதம் பேர் சாப்பாடு இல்லாமல் தூங்குகிறார்கள். இது போன்ற நாட்டில் வலுக்கட்டாயமாக ஒரு தேர்தல் நடத்தப்படுகிறது. மக்கள் மீது சுமை திணிக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம் மக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தலை நடத்துகிறது. இது ஏற்புடையதாக இல்லை. அப்படியே பதவிக்கு ஆசைப்பட்டு நீங்கள் எம்பியாக இருந்து எம்எல்ஏவாகவோ அல்லது எம்எல்ஏவாக இருந்து எம்பியாகவோ போக வேண்டும் என்றால் இடைத்தேர்தல் செலவை செலுத்துங்கள், என்ன ஒரு 25 கோடி ஆகும் என நினைக்கிறேன். இந்த காசை கொடுத்துவிட்டு பதவியேற்றுக் கொள்ளுங்கள்.
ஒரு வேளை திருமாவளவன் எம்எல்ஏ ஆகிவிட்டார் என வைத்துக் கொள்வோம். அப்போது சிதம்பரம் எம்பி தொகுதியில் இருந்து அவர் ராஜினாமா செய்வார். வலுக்கட்டாயமாக ஒரு இடைத்தேர்தல் வரும் அந்த செலவை யார் ஏற்பார்.
நான் என்ன பரிந்துரைக்கிறேன் என்றால் அந்த தொகுதியில் தேர்தலில் 2 ஆவது இடம் பிடித்து இருப்பவர்களுக்கு மக்கள் அளித்த ஓட்டுக்களுக்கு மதிப்பளித்து மீதம் இருக்கும் இரண்டரை காலத்தில் அவர் எம்பியாக தொடருவார் என அறிவித்துவிட்டால் தேர்தல் செலவு மிச்சம். இதுதான் அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம். அப்படி இல்லை என்றால் யார் பதவிக்காக போனாங்களோ அவர்களிடமே காசை வாங்கி தேர்தலை நடத்துங்கள். மக்கள் காசி நடத்தாதீங்க, என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் சொல்வதை வைத்து பார்த்தால் சிதம்பரம் எம்பி தேர்தலில் 2ஆவது இடத்தை பிடித்தவர் அதிமுக வேட்பாளர் எம்.சந்திரகாசன். இவர் 4,01,530 வாக்குகளைா எடுத்துள்ளார். திருமாவளவன் தற்போது மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தேசிய அரசியலில் இருந்து சட்டசபை தேர்தலுக்கு போட்டியிடுகிறார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/thirumavalavan-candidacy-seeman-questions-who-will-bear-chidambaram-by-election-cost-785803.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
