
India
oi-Vigneshkumar
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், அங்கு எந்த கட்சி வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்பது தொடர்பாக புதிய சர்வே வெளியாகியுள்ளது. அதில் மம்தாவின் செல்வாக்கு மேற்கு வங்கத்தில் குறையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த முறையும் அங்கு மம்தாவே வென்று ஆட்சியை அமைக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இப்போது அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. அங்கு தொடர்ந்து 4வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் மம்தா களமிறங்கியுள்ளார். அதேநேரம் மம்தாவை எப்படியாவது தோற்கடித்தே தீர வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

மேற்கு வங்கம்
இதற்கிடையே வோட்வைப் அமைப்பின் ‘வோட் டிராக்கர்’ சர்வே முடிவுகளை சிஎன்என்-நியூஸ்18 (CNN-News18) வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு வங்கத்தில் மம்தா வெல்லவே வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. மம்தாவின் இமேஜ் தான் மேற்கு வங்கத்தில் இன்னுமே திரிணாமுலுக்கு பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுத் தருகிறது.
வெல்லப் போவது யார்
மேற்கு வங்கத்தில் இந்த முறை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 169- 179 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக 113- 123 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 1 முதல் 3 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ள சூழலில் 148ல் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். அதன்படி பார்த்தால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் இங்கு கவனிக்க வைக்கும் இன்னொரு விஷயம் இருக்கிறது. அதாவது கடந்த 23ம் தேதி வெளியான இதே வைட் டிராக்கர் சர்வேயில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 184- 194 இடங்கள் தரப்பட்டு இருந்தது. பாஜகவுக்காக 98-108 இடங்கள் தரப்பட்டு இருந்தது. ஆனால், மக்கள் மனநிலை மெல்ல மாறிவருவதாக புதிய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ்
வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை திரிணாமுல் காங்கிரஸ் 43.4% வாக்குகளைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுலுக்கு அடுத்து பாஜக 38.1% வாக்குகளைப் பெற்று 2வது பெரிய கட்சியாக உள்ளது. ஒரு காலத்தில் மாநிலத்தைத் தனது கண்ட்ரோலில் வைத்திருந்த இடதுசாரிகளின் வாக்கு வங்கி அங்கு வெறும் 4%ஆக குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் நிலைமை அதை விட மோசமாக வெறும் 2%ஆகக் குறைந்துவிட்டதாம்.
மற்ற கட்சிகளுக்கு ஆதரவாக 2% பேர் கருத்து கூறியுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சுமார் 10.4% மக்கள் இதுவரை யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை முடிவு செய்யாமல் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் எடுக்கும் முடிவு மேற்கு வங்க அரசியலில் முக்கியமானதாக மாறலாம் எனச் சொல்லப்படுகிறது.
மம்தா
அதேபோல யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வியில் சந்தேகமே இல்லாமல் மம்தா தான் முன்னிலையில் இருக்கிறார். சுமார் 46.4% மக்கள் மம்தா பானர்ஜி தான் சிறந்த முதல்வர் வேட்பாளர் என கூறியுள்ளனர். அவரை தொடர்ந்து சுமார் 34.9% ஆதரவுடன் சுவேந்து அதிகாரி 2வது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து சிபிஎம் கட்சியின் முகமது சலீம் 3வது இடத்திலும், காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4வது இடத்திலும் உள்ளனர். இருப்பினும், இவர்களுக்கு மிகக் குறைவாக முறையே 5% மற்றும் 3.2% ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. இதர தலைவர்களுக்கு 5.5% பேர் ஆதரவளித்துள்ளனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/west-bengal-elections-opinion-poll-mamata-tmc-will-win-comfortably-over-bjp-says-news18-survey-785961.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
