கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் | UK to Unite 35 Nations to Reopen Strait of Hormuz

International

oi-Mani Singh S

லண்டன்: ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் வழிகள் குறித்து ஆலோசிக்க இந்த வாரம் சர்வதேச தூதரக மாநாட்டை இங்கிலாந்து நடத்தும் என பிரதமர் கியர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். மேலும், முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையில் கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுக்க 35 நாடுகள் இணைந்து செயல்பட உறுதி மொழி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

UK to Unite 35 Nations to Reopen Strait of Hormuz

அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி

போதாக்குறைக்கு ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தங்களின் நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டுமே முன் அனுமதியுடன் அனுமதிப்போம் என்றும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதியில்லை என்று ஈரான் கூறி வருகிறது. மீறி சென்றால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் இந்த வழியாகவே நடைபெறுவதால் கச்சா எண்ணெய் விலையேற்றம் கண்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்

சொந்த நாட்டிலேயே அமெரிக்காவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே ஈரான் விவகாரத்தில் நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். நாளை காலை 6.30 மணி (இந்திய நேரப்படி) இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிடுவார் என்று தெரிகிறது.

ஈரான் மீது மேலும் தீர்க்கமாக தாக்குதல் நடத்தப்பட உள்ளதா? அல்லது ஈரானில் தாக்குதலை நிறுத்த முடிவு செய்துள்ளாரா டிரம்ப்? என்பது தெரியவில்லை. ஈரான் போர் விவகாரத்தில் நட்பு நாடுகள் தங்களுக்கு உதவவில்லை என்று டிரம்ப் காட்டமாக பேசி வருகிறார். அமெரிக்காவுக்கு உதவாத நாடுகளை கடுமையாக கண்டித்த டிரம்ப், “உங்களுக்கு தேவையான எண்ணயை நீங்களே தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள் ” என்று கூறினார்.

35 நாடுகளுடன் கூட்டம்

இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் பாதுகாப்பை இறுதி செய்ய 35 நாடுகளுடன் ஒப்பந்தம் போட இருப்பதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறுகையில், “மக்களிடம் ஒரு உண்மையை சொல்கிறேன். மத்திய கிழக்குப் போரின் தாக்கம் பிரிட்டனின் எதிர்காலத்தை பாதிக்கும். மக்களிடம் உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும், இது எளிதாக இருக்காது.

இந்தப் போர் பிரிட்டனின் போர் அல்ல, இதில் நாம் நிச்சயம் தலையிட மாட்டோம். போரில் இணைய அழுத்தங்கள் இருந்தாலும், தேசிய நலன் கருதியே முடிவெடுப்பேன். ஹார்முஸ் நீரிணை தொடர்பாக சுமார் 35 நாடுகளுடன் கூட்டம் நடத்த உள்ளோம்” கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக இருக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது பற்றி ஆய்வு செய்ய கூட்டம் நடைபெற இருக்கிறது” என்று கூறினார்.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இதில் கையெழுத்திட உள்ளதாகவும் கூறினார். இந்தப் போரின் தாக்கம் “ஒரு தலைமுறையை நிர்ணயிக்கும் அளவிற்கு இருக்கும் என்றும், 1970களில் ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வைப் போன்ற நிலை உருவாகக்கூடும்” என்றும் பிரிட்டிஷ் பிரதமர் தெரிவித்தார்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/uk-to-unite-35-nations-to-reopen-strait-of-hormuz-786361.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo