
International
oi-Prasanna Venkatesh
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச அமைதி திட்டத்திற்கு பதிலாக, ஈரான் தனது 10 அம்ச திட்டத்தை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கும், போர் நிறுத்த முடிவுக்கும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த ஈரான், முதல் முறையாக போரை நிறுத்த 10 அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளது. இதேபோல் அமெரிக்காவின் 15 திட்ட அம்சத்தை ஈரான் ஏற்கவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளது.
ஈரான் முன்வைத்த இந்த 10 திட்ட அம்சங்கள் மிகவும் முக்கியமானதாகவும், ஈரான் போரில் முக்கிய திருப்பமாகவும் பார்க்கப்படுகிறது.

ஈரான் போர்
இந்த மோதல், ஆறு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் மேற்கொண்ட தாக்குதல்கள் மூலம் தொடங்கியது. குறிப்பாக, 86 வயதான ஈரான் உயர் தலைவரான அலி காமெனி உயிரிழந்த சம்பவம், இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ஈரான் வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் சொத்துகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழித்தடத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் 15 அம்ச திட்டம்
மார்ச் 24ஆம் தேதி, அமெரிக்கா தனது 15 அம்ச அமைதி திட்டத்தை பாகிஸ்தான் அரசின் வாயிலாக ஈரானுக்கு அனுப்பியது. ஆனால், இந்த திட்டத்தை ஈரான் கடுமையாக நிராகரித்தது. ஈரான் வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவின் 15 அம்ச அமைதி திட்டம் அதிகப்படியானது, நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று விமர்சித்தார்.
ஈரானின் 10 அம்ச திட்டம்
இந்த நிலையில் ஈரான் வெளியிட்டுள்ள 10 அம்ச திட்டம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிபந்தனைகளை மையமாகக் கொண்டுள்ளது. இந்த 10 திட்ட அம்சம் குறித்து முதலில் வெளிப்படையாக ஈரான் அறிவிக்காத நிலையில் தற்போது தி கோபைஸ்ஸி லெட்டர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
10 அம்ச திட்ட விவரம்
1. ஈரான் மீது மீண்டும் தாக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் அமெரிக்கா மற்றம் அதன் நட்பு நாடுகள் வழங்க வேண்டும்.
2. தாக்குதல் நிறுத்தம் மட்டுமல்ல, போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்.
3. லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
4. ஈரான் மீதான அனைத்து அமெரிக்கத் தடைகளையும் நீக்க வேண்டும்.
5. ஈரானிய நட்பு நாடுகளுக்கு எதிரான அனைத்து பிராந்திய தாக்குதல்கள் போர்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
6. இதற்குப் பதிலாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும்.
7. இதேபோல் ஹார்முஸ் வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டாலர் ஈரான் கட்டணத்தை விதிக்கும்.
8. ஈரான் இந்தக் கட்டணங்களை ஓமன் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளும்.
9. ஹார்முஸ் வழியாகப் உலக நாடுகளின் கப்பல் பாதுகாப்பாகச் செல்வதற்கான விதிகளை ஈரான் வழங்கும்.
10. ஈரான் ஹார்முஸ் கட்டணங்களை இழப்பீடுகளுக்குப் பதிலாகப் புனரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும்.
இப்படி ஈரான் தரப்பில் அமெரிக்காவுக்கு போரை நிறுத்த 10 அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்த நிலையில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்துள்ள கெடு-வுக்கு இன்னும் 20 மணி நேரம் உள்ள நிலையில், அமெரிக்க அரசின் நிலைபாடு என்ன..? என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
அமெரிக்கா கெடு
இந்த அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கொடுத்த காலக்கெடு-வில் இன்னும் 20 மணி நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தீர்வு கிடைக்குமா என்பது உலக நாடுகளின் கவலையாக உள்ளது.
இதற்கிடையில், இன்று மாலை அமெரிக்க பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்திருந்த முக்கிய செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதும், நிலைமை நெருக்கடியாக மாறியுள்ளது என்பதையும் காட்டுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-rejects-us-15-point-peace-plan-issues-10-point-counter-proposal-demands-permanent-end-to-war-787791.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
