
Business
oi-Prasanna Venkatesh
இந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் பெரும் பங்கு வகிக்கும் இந்திய ஐடி சேவை துறை கடந்த 2-3 வருடங்களாக தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் ஜிசிசி நிறுவனங்கள் அதிகளவில் வந்ததில் துவங்கிய பிரச்சனைகள் தற்போது ஏஐ வரையில் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இதன் தாக்கம் அதிகளவில் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் தகவல் தொழில்நுட்ப (IT) துறை தற்போது முக்கிய கட்டத்தில் உள்ளது. குறிப்பாக, நிஃப்டி ஐடி குறியீடு இந்த ஆண்டில் இதுவரை சுமார் 20% வரை சரிந்துள்ளது. இத்தகைய காலக்கட்டத்தில் மார்ச் காலாண்டு முடிவுதளை வெளியிடும் சீசன் துவங்கியுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி டிசிஎஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு ஐடி நிறுவனங்களின் Q4 சீசன் துவங்கிவைக்க உள்ளது.

இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தற்போதைய முக்கியமான கேள்வி, ஐடி நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பா, அல்லது இன்னும் சிக்கல்கள் உள்ளதால் முதலீட்டு செய்வதை தவிர்க்கலாமா என்பது தான்?
ஐடி பங்குகளின் நிலை
| நிறுவனம் | பங்கு விலை(ரூ.) | வரலாற்று உச்சம் | 3மாத லாபம்(%) | 1ஆண்டு லாபம்(%) |
| டிசிஎஸ் | 2534.2 | 4592.25 | -24.93 | -24.44 |
| இன்ஃபோசிஸ் | 1334.45 | 2006.8 | -20.31 | -6.48 |
| HCL டெக்னாலஜிஸ் | 1444.7 | 2012.2 | -14.83 | 2.13 |
| விப்ரோ | 204 | 369.93 | -27.15 | -18.78 |
| டெக் மஹிந்திரா | 1473.5 | 1854 | -10.81 | 12.54 |
| எல்டிஐமைண்ட்ரீ | 4412.1 | 7595.25 | -29.41 | 6.17 |
| பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் | 5386.95 | 6788.9 | -18.49 | 16.09 |
| ஒராகிள் ஃபைன். சர்வ். | 7150.55 | 13220 | -10.41 | -3.8 |
| எம்ஃபாசிஸ் | 2332.35 | 3659.75 | -22.25 | 6.33 |
| கோஃபோர்ஜ் | 1227.45 | 2005.36 | -28.29 | -3.78 |
| ஹெக்ஸாவேர் டெக். | 458.6 | 900.15 | -40.34 | -31.33 |
| டாடா எல்எக்ஸி | 4360.3 | 10760.4 | -27.01 | -11.15 |
| கேபிஐடி டெக்னாலஜி | 701.5 | 1928.75 | -42.5 | -34.77 |
| ஜென்சார் டெக். | 549.4 | 985 | -21.58 | -15.11 |
ஜீரோ எதிர்பார்ப்பு
பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரும் போது முதலீட்டு சந்தை கொஞ்சம் ஹைப்-ல் இருக்கும், ஆனால் இந்த முறை இத்துறைக்கு சாதகமாக ரூபாய் மதிப்பு குறைந்து, டாலர் மதிப்பு அதிகமாக இருந்தாலும் போதுமான ஆர்வம் முதலீட்டு சந்தையில் இல்லை. இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளது.
ஐடி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு முடிவுகள் குறித்து சந்தை எதிர்பார்ப்பு தற்போது மிகவும் குறைவாக உள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் நிறுவனங்களின் செலவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், புதிய ஒப்பந்தங்கள் பெறுவது குறைந்து வருவது ஆகியவற்றின் மூலம் டாலர் மதிப்பு உயர்ந்தும் பயன் இல்லாம் இருக்கிறது.
இந்த நிலையில் மாஸ்டர் கேப்பிடல் சர்வீசஸ் நிறுவனத்தின் முதலீட்டு நிபுணரான ரவி சிங் கூறுகையில், மார்ச் காலாண்டில் உலகளாவிய போர் பதற்றம், மந்தமான பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் ஐடி நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி மிதமாகவே இருக்கும் என தெரிவித்தார்.
இதனால் இக்காலக்கட்டத்தில் பெரிய அளவிலான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு அதிகம். எனவே ஐடி நிறுவனங்கள் டிமாண்ட் சார்ந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றன என தெரிவித்தார்.
உலகளாவிய தேவை குறைவு
இந்திய ஐடி துறையின் வளர்ச்சி பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் மீது அதிகம் சார்ந்துள்ளது. தற்போது அந்த பகுதிகளில் பொருளாதார மந்தநிலை நிலவுவதால், நிறுவனங்கள் தேவையற்ற செலவுகளை குறைத்து வருகின்றன.
இதன் விளைவாக, IT சேவைகளுக்கான முதலீட்டையும், செலவுகளையும் குறைந்து, புதிய திட்டங்கள் கிடைப்பதில் தாமதமாகின்றன. இது ஐடி நிறுவனங்களின் வருமானத்தையும் நேரடியாக பாதிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு – வாய்ப்பும், ஆபத்தும்
தற்போதைய ஐடி துறையின் முக்கிய விவாதமாக மாறியுள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு. இப்புதிய தொழில்நுட்பம் மூலம் இந்திய ஐடி சேவை துறையில் மாறுப்பட்ட சூழ்நிலை நிலவுகிறது.
ஒருபுறம், AI தொழில்நுட்பம் ஐடி நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, ஆட்டோமேஷன், கிளவுட், டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் போன்ற துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இது நீண்டகால வளர்ச்சிக்கு உதவும் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம், AI காரணமாக ஐடி சேவைகளின் கட்டணம் குறையக்கூடும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது. அதாவது, ஆட்டோமேஷன் அதிகரிப்பதாலும், ஏஐ கோடிங் வேலையை வேகமாக செய்யும் காரணத்தாலும் மனித வேலைத் தேவைகள் குறைய வாய்ப்பு உள்ளது. இதேபோல் நீண்ட கால திட்டங்கள் இனி வரும் காலக்கட்டத்தில் அவசியம் இருக்காது. இதனால் IT நிறுவனங்களின் வருமானத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
முதலீட்டாளர்களின் மனநிலை
இந்த அனைத்து காரணிகளும் சேர்ந்து முதலீட்டாளர்களின் மனநிலையை தற்போது ஐடி துறை பங்குகள் மீது எச்சரிக்கையாக மாற்றியுள்ளது. மேலும் இக்காலண்டில் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் ஏஐ சேவை பிரிவின் வருவாயை தனிப்பட்ட முறையில் வெளியிடும், இது எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது, இதேபோல் நிறுவனத்தின் வருவாய், மார்ஜின் அளவு எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை பார்த்தே ஐடி துறையின் எதிர்காலம் தெரிந்துவிடும்.
இதன் மூலம் குறுகிய காலத்தில் ஐடி பங்குகளில் லாபம் எதிர்பார்ப்பது சரியானதாக இருக்காது, காரணம் இத்துறை தற்போது மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில், நீண்டகால முதலீட்டாளர்கள் AI மூலம் உருவாகும் புதிய வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த சரிவை ஒரு வாய்ப்பாகவும் பார்க்கின்றனர்.
இதனால் முதலீட்டாளர்கள் ஐடி துறை மற்றும் அதன் வர்த்தக சந்தை, தொழில்நுட்ப போக்கை கவனித்து, முழுமையாக புரிந்துக்கொண்டு முதலீடு செய்வதே சிறந்த முடிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய துறை
மார்ச் காலாண்டில் உலகளவில் BFSI சேவை துறை குறிப்பிட்ட அளவில் வளர்ச்சி அடைந்து வந்தாலும் ஹெல்த்கேர், உற்பத்தி, ரீடைல், ஹய் டெக் ஆகிய துறைகள் மந்தமான வளர்ச்சி பாதையிலேயே உள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் இருந்து கிடைக்கும் வர்த்தகம் குறைந்துள்ளதால் இக்காலாண்டில் ஐடி நிறுவனங்களின் வருவாய் மந்தமாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது. நிலையான நாணய மதிப்பில் கணக்கிட்டால் 0.3- 3.2 சதவீதம் வரையில் மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஊழியர்களின் சம்பள உயர்வு, ஏஐ சேவைக்காக உள்கட்டமைப்பு மேம்பாடு, முக்கிய திட்டங்கள் கையைவிட்டு போனது என பல்வேறு காரணத்தால் மார்ஜின் அளவும் குறையும் என கணிக்கப்படுகிறது. ஆனால் இக்காலாண்டில் பணிநீக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் மார்ஜின் அளவுகள சில நிறுவனங்களில் அதிகமாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/tcs-infosys-wipro-q4-fy26-earnings-time-to-make-a-crucial-decision-nifty-it-down-20-in-2026-787847.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
