
Business
oi-Prasanna Venkatesh
மத்திய அரசு ஏப்ரல் 1ஆம் தேதி அன்று மாதாந்திர எரிபொருள் விலை திருத்த நடவடிக்கையை அறிவித்தபோது, வணிக சிலிண்டர் விலை உயர்வுடன் விமான எரிபொருள் (ATF) விலை உயர்வையும் அறிவித்தது. இதன் மூலம் இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளானது. நாடு முழுவதும் விமான எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த நிலையில் விமான நிறுவனங்களுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA) விமான நிறுவனங்களின் சுமையை குறைக்க முக்கிய நிவாரண நடவடிக்கையை அறிவித்துள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை உயர்வு கட்டுப்படுத்த முடிவது மட்டும் அல்லாமல் குறைக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ATF விலை உச்சம்
டெல்லியில் ஒரு கிலோலிட்டர் ATF விலை ரூ.96,638.14-லிருந்து தற்போது ரூ.2,07,341.22 ஆக உயர்ந்துள்ளது. இது 115 சதவீதத்துக்கும் அதிகமான உயர்வாகும். கொல்கத்தாவில் ரூ.2,05,955.33, சென்னையில் ரூ.2,14,597.66 (அதிகபட்ச விலை, போக்குவரத்து செலவுகள் காரணமாக), மும்பையில் ரூ.1,94,968.67 என்ற அளவில் ATF விலை உயர்ந்துள்ளது. இந்த உயர்வு விமான நிறுவனங்களின் இயக்கச் செலவை பெருமளவு அதிகரித்துள்ளது.
AERA உடனடி நிவாரணம்
கடுமையான நிதி பாதிப்பில் இருக்கும் இந்திய விமான நிறுவனங்களுக்கு உதவும் வகையில், AERA 25 சதவீதம் தளர்வை முக்கிய கட்டணத்தில் அறிவித்து உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களுக்கான லேண்டிங் (தரையிறங்கும்) மற்றும் பார்க்கிங் (நிறுத்தும்) கட்டணங்கள் 25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கட்டணங்கள் ஏரோநாட்டிக்கல் டாரிஃப்ஸ் என்ற பிரிவின் கீழ் வருகின்றன.
உள்நாட்டு விமானங்களுக்கு மட்டும்
இந்த 25 சதவீத கட்டணக் குறைப்பு தற்போது உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும். சர்வதேச விமானங்களுக்கு இந்த சலுகை இல்லை. AERA இந்த முடிவின் பயன்பாட்டை மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆய்வு செய்து இதை தொடரலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பதை முடிவு செய்யும்.
கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை வாயிலாக வரும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக ATF விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. விமான இயக்கத்தில் பெரும் பகுதி செலவு என்பது விமான எரிபொருள் செலவுகள் தான்.
இந்த நிலையில் AERA-வின் 25 சதவீத கட்டணக் குறைப்பு விமான நிறுவனங்களின் இயக்கச் செலவை ஓரளவு குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளுக்கு என்ன நன்மை
விமான எரிபொருள் விலை உயர்ந்த உடன் விமான நிறுவனங்கள் டிக்கெட் விலை உயர்த்த துவங்கியிருக்கும் நிலையில், இந்த நிவாரணம் நேரடியாக பயணிகளின் டிக்கெட் விலையை குறைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என்றாலும் பெரும் உயர்வை கட்டுப்படுத்த முடியும். விமான எரிபொருள் விலை குறையும் பட்சத்தில் காலப்போக்கில் கட்டணங்கள் நிலைபெற்று சில சலுகைகள் அறிவிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. தற்போது ATF விலை உயர்வால் ஏற்பட்டுள்ள அழுத்தம் ஓரளவு தணியும் என்பதே இந்த 25 சதவீத கட்டண தளர்வு கொடுத்துள்ள வாய்ப்பு.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/air-india-indigo-gets-big-relief-aera-orders-25-cut-in-landing-parking-charges-for-domestic-f-788147.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
