
International
oi-Mani Singh S
தெஹ்ரான்: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த ஈரான் – அமெரிக்கா போர் இரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டாலும் ஈரான் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈரானின் லாவன் தீவில் உள்ள எண்ணெய் ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை எதிரிகளின் தாக்குதல் என்று ஈரான் விமர்சித்துள்ளது.
வளைகுடா நாடுகளை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெரும் பதற்றத்தில் வைத்திருந்த ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கும் இந்த போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ஏற்பாட்டில் அமெரிக்கா- ஈரான் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது.

10 கண்டிஷன்களை போட்ட ஈரான்
இந்த போர் நிறுத்தத்திற்கு ஈரான் 10 நிபந்தனைகளையும் விதித்துள்ளது. ஈராக், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் மீது நடத்தப்படும் போரை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உடனடியாக, முழுமையாக நிறுத்த வேண்டும். ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் நிரந்தரமாகக் கைவிடப்பட வேண்டும். இதற்கு காலக்கெடு கிடையாது.
பிராந்தியத்தில் நிலவும் அனைத்து மோதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட கண்டிஷன்களை ஈரான் விதித்துள்ளது.
ஈரான் எண்ணெய் ஆலை மீது தாக்குதல்
தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதை நிரந்தரமாக்குவதற்காக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. இதற்கிடையே போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டாலும் ஈரான் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈரானின் லாவன் தீவில் உள்ள எண்ணெய் ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை எதிரிகளின் தாக்குதல் என்று ஈரான் விமர்சித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.10 மணிக்கு இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வர உடனடியாக மீட்பு குழுவினர் வரவைக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. அதேபோல, தங்கள் நாடுகளின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக வளைகுடா நாடுகளும் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்
ஐக்கிய அரபு அமீரகம் இது தொடர்பாக கூறுகையில், ஈரானில் இருந்து வரும் ஏவுகணைகளை தடுத்து அழிக்க வான் தடுப்பு அமைப்புகளை ஆக்டிவாக வைத்து இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது. ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெடி சத்தம் கேட்பதாகவும், வான் தடுப்பு அமைப்புகள் வானிலேயே இடைமறித்து ஏவுகணைகளை அழித்து வருவதாகவும் கூறியுள்ளது.
குவைத்தும் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஈரானிய டிரோன்கள் இன்று காலை 8 மணி முதலே அணிவகுத்து வருவதாகவும், அவற்றை வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து அழிப்பதாகவும் கூறியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும் தாக்குதல் நடைபெற்றதாக வெளியாகியிருக்கும் தகவல் மத்திய கிழக்கில் பதற்றத்தை தணியாமல் வைத்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/attacks-on-iran-continue-despite-the-announcement-of-ceasefire-tensions-remain-unabated-788201.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
