
International
oi-Mani Singh S
ஜெருசலேம்: ஈரான் அறிவித்த போர் நிறுத்த நிபந்தனைகளில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற அம்சம் இல்லை என்றும், எனவே அந்த அமைப்பு மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் செயல்பாட்டால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஈரானின் அணு ஆயுத திட்டங்களை எதிர்த்து கடந்த மாதம் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கின. இந்த தாக்குதன் முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, ஈரான் இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தது.

போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஈரான் மட்டுமின்றி அதற்கு ஆதரவாக போரிட்ட லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்களும் பலர் உயிரிழந்தனர். ஈரான் உச்ச தலைவர் கமேனி மட்டுமின்றி, அந்த நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளும் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதனால், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியதால், சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் மொத்த ஈரானையும் ஒரே இரவில் அழிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி கெடு விதித்து கூறியிருந்தார். டிரம்ப் விதித்த கெடு முடிவதற்கு ஒரு சில மணி நேரங்களே இருந்த நிலையில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
தாக்குதல் தொடரும் என அறிவிப்பு
ஈரான் மீது 2 வாரத்திற்கு தாக்குதல் நடத்தப்படாது என்றும் இதற்கும் ஈரானும் ஒகே சொல்லியிருப்பதாக டிரம்ப் அறிவித்தார். போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான் 10 அம்ச நிபந்தனையும் விதித்து இருந்தது. தங்களுக்கு எதிரான பொருளாதார தடை நீக்கம், முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிப்பு, வளைகுடா பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம் ஆகியவை இதில் இடம் பெற்று இருந்தன.
ஆனால், டிரம்ப் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இவை ஏற்புடையவையாக இருக்காது என்றே சொல்லப்படும் நிலையில், இதை எப்படி அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்ற குழப்பமும் நீடித்து வருகிறது. இதற்கிடையே, இந்த போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டு இருந்தாலும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான எந்த அம்சங்களும் அதில் இல்லை எனவும் எனவே லெபனானின் மீது தங்கள் தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல
இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று ஈரான் கூறி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் என ஈரான் கூறி வரும் நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களை தொடரந்து தாக்குவோம் என்று உறுதிபட இஸ்ரேல் கூறியிருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல இஸ்ரேலின் செயல்பாட்டால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கூறியுள்ளனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/we-will-continue-to-launch-attacks-against-hezbollah-in-lebanon-israeli-pm-benjamin-netanyahu-788269.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
