
International
oi-Prasanna Venkatesh
ஈரான் போர் முடிந்து பேச்சுவார்த்தை கட்டத்தில் இருக்கும் வேளையில், டிரம்ப் அடுத்த டார்கெட்-ஐ நோக்கி நகர்ந்துள்ளார். மீண்டும் கிரீன்லாந்து கைப்பற்றும் முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். இதோடு கிரீன்லாந்துக்கு பாதுகாப்பாக இருக்கும் நேட்டோ படைகளையும்,நேட்டோ நாடுகளையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், நேட்டோ நாடுகளுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் உடனான போரில் உதவாத நேட்டோ நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற்று, ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு மாற்றும் திட்டத்தை அவர் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு அமெரிக்கா – நேட்டோ உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவு
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், நேட்டோ எங்களுக்கு தேவைப்பட்டபோது அங்கு இல்லை. எதிர்காலத்திலும் இருக்காது. கிரீன்லாந்து நினைவில் கொள்ளுங்கள் – (NATO) இது பெரிய, மோசமாக நிர்வகிக்கப்படும் அமைப்பு என்று பதிவிட்டு உள்ளார் டிரம்ப்.
இந்தப் பதிவு நேட்டோ நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. மேலும் ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தவும், மீடியேட்டராக விளங்கவும் ஒரு ஐரோப்பிய நாடும் முன்வரவில்லை, இதனால் அமெரிக்கா பாகிஸ்தானை நம்பி களத்தில் இறங்க வேண்டிய நிலை உருவானது.
அமெரிக்க படைகளை மாற்றும் திட்டம்
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் போரில் அமெரிக்காவுக்கு உதவாத நேட்டோ படை மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளையும் தண்டிக்க டிரம்ப் ஒரு திட்டத்தை ஆய்வு செய்து வருகிறார். ஈரான் போரில் உதவாத நேட்டோ நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற்று, ஆதரவு அளித்த நாடுகளுக்கு மாற்றும் திட்டத்தை ஆய்வு செய்து வருகிறார். இது நேட்டோவுக்கு எதிரான டிரம்ப் திட்டமிட்டு வரும் பல திட்டங்களில் முக்கியமான ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?
ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்த நாடுகளான போலந்து, ருமேனியா, லிதுவேனியா மற்றும் கிரீஸ் ஆகியவை இந்தத் திட்டத்தால் பயனடையும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நாடுகளுக்கு அதிக அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்படலாம். மறுபுறம், உதவாத என்று கருதப்படும் நாடுகளில் இருந்து படைகள் திரும்பப் பெறப்படும், இது பல நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும்.
ஐரோப்பாவில் அமெரிக்க படை
தற்போது ஐரோப்பாவில் சுமார் 84,000 அமெரிக்க படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை டிரம்பின் புதிய திட்டத்தால் பெரிய அளவில் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையேயான உறவையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா – நேட்டோ உறவில் விரிசல்
இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் நேட்டோ இடையேயான உறவு மேலும் மோசமடைந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. ஈரான் மோதல் சூழலில் நேட்டோ நாடுகளின் ஆதரவு போதுமான அளவில் இல்லை என்று டிரம்ப் குற்றம்சாட்டுவதே இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகள் மாறும்போது, எண்ணெய் விலை, பொருட்கள் விலை மற்றும் உலக வர்த்தகம் ஆகியவை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் டிரம்பின் இந்தத் திட்டம் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படும் என்பது தான் அடுத்த கேள்வி. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஐரோப்பாவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படலாம்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/trump-targets-nato-again-unhelpful-countries-to-lose-us-troops-over-iran-war-greenland-reminder-788311.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
