
International
oi-Prasanna Venkatesh
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட புதிய பதிவு, ஈரான் போர் சூழலை மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானுடன் நாளை பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, உலக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மீண்டும் போர் துவங்கும்
டிரம்ப் தனது பதிவில், அமெரிக்காவின் அனைத்து போர் கப்பல்கள், விமானங்கள், ராணுவ வீரர்கள், கூடுதல் தோட்டாக்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஈரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்று தெளிவாகக் கூறியுள்ளார். ‘ஈரான் உடன் உண்மையான ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறும் வரை’ இந்த நிலை தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த அமைதி ஒப்பந்தம் நடக்கவில்லை எனில் ‘போர் தொடங்கும்’ என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். புதிதாக துவங்கப்போகும் தாக்குதல் ‘இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு பெரியதாகவும், வலுவானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும்’ இருக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்த எச்சரிக்கை ஈரானுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்துள்ளது.
ஏற்கனவே, அமெரிக்க அரசும், டிரம்பும் பேசும் தொனியை மாற்ற வேண்டும் என ஈரான் எச்சரித்துள்ளது. இதோடு ஈரானை மிரட்டி, பயமுறுத்தி, பிரஷஷரில் தள்ளி ஒப்பந்தம் செய்துக்கொள்ள நினைத்தால், இந்த பேச்சுவார்த்தை எந்த இடத்திற்கும் செல்லாது என போர் நிறுத்தம் அறிவிப்புக்கு முன்பாகவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதம் இல்லை
டிரம்ப் மேலும் தனது பதிவில், அடுத்த தாக்குதலில் அணு ஆயுதங்கள் இருக்காது என்றும், தாக்குதலின் முடிவில் ஹார்முஸ் நீரிணை திறந்து பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு விஷயங்களும் முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டவை என்றும், அதற்கு எதிரான எந்தப் பேச்சும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக டிரம்ப் தனது பதிவில், அமெரிக்க ராணுவம் தற்போது அனைத்து விதிமான தாக்குதலுக்கும் தேவையான ஆயுதங்களை தயார் நிலையில் வைத்து அடுத்த அறிவிப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்தார், AMERICA IS BACK என்று உறுதியுடன் தனது பதிவை முடித்துள்ளார்.
நாளை பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை
ஈரான் – அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நாளை பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், டிரம்பின் இந்த பதிவு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சூழலில் கூட, டிரம்ப் ராணுவ ரீதியாக தயார் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது, பேச்சுவார்த்தையின் முடிவை எப்படி பாதிக்கும் என்பதை உலக நாடுகளுக்கு பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
ஈரான் – அமெரிக்கா மோதல்கள் தொடர்ந்தால், எண்ணெய் விலை, பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஈரான் – அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூகமாக முடிவுகள் எட்டப்பட வேண்டியது அவசியம்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/trump-issues-fresh-warning-to-iran-shootin-starts-if-agreement-not-followed-us-military-ready-788407.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
