
International
oi-Vigneshkumar
பாரீஸ்: அமெரிக்காவில் பல ஆண்டுகளாகத் தூங்கிக்கொண்டிருந்த தனது 129 டன் தங்கத்தை, சத்தமே இல்லாமல் ஒரு மாஸ்டர் பிளான் மூலம் பாதுகாப்பாகப் பாரிஸுக்குக் கொண்டு வந்திருக்கிறது பிரான்ஸ். மேலும், இந்த ஐடியாவால் அந்த நாட்டுக்குக் கிடைத்த லாபம் மட்டும் சுமார் 12.8 பில்லியன் யூரோக்கள் (கிட்டத்தட்ட ₹1,38,431 கோடி). இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக இந்தியாவில் அவசர தேவைக்கு பலரும் தங்கத்தை முதலீடாக கருதி சேமித்து வருவார்கள். எதிர்காலத்தில் பிரச்சனை என்றால் தங்கம் கை கொடுக்கும் என்பது பொதுமக்கள் நம்பிக்கை. அதேபோல தான் உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் பொருளாதார குழப்பம் ஏற்படும்போது சமாளிப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தை வாங்கி குவிப்பார்கள்.

பெரிய கேம்
அப்படி தான் பிரான்ஸும் பல ஆண்டுகளாக தங்கத்தை வாங்கி குவித்து இருந்தது. அதை வைத்து தான் இப்போது சத்தமின்றி பெரிய கேமை ஆடியுள்ளது. அதாவது
பிரான்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த தங்க இருப்பான 2,437 டன்னில், சுமார் 5% தங்கம் அதாவது 129 டன் அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பல ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதுவரை பிரச்சனை இல்லை என்றாலும் டிரம்ப் மாறி மாறி பேசுவது, மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட காரணங்கலால் தனது தங்கத்தை வெளிநாடுகளில் வைத்திருக்க வேண்டாம் என பிரான்ஸ் நினைத்தது.
என்ன செய்தது
அதை மீண்டும் பாரிஸ் நகருக்கே கொண்டு வர பிரான்ஸ் மத்திய வங்கி முடிவு செய்தது. ஆனால், இவ்வளவு பெரிய அளவிலான தங்கத்தைக் கப்பலிலோ அல்லது விமானத்திலோ பாதுகாப்பாகக் கொண்டு வருவது என்பது மிகப் பெரிய ரிஸ்க். சர்வதேச அளவில் இன்சூரன்ஸ், பலத்த பாதுகாப்பு எனப் பல நூறு கோடி ரூபாய் செலவாகும். இங்குதான் தனது செம ஸ்மார்ட்டான மூளையைப் பயன்படுத்தியது பிரான்ஸ். நியூயார்க்கில் உள்ள தங்கத்தை அங்கேயே சர்வதேச சந்தையில் விற்றுவிட்டு, அதே அளவுக்கான புதிய தங்கத்தை ஐரோப்பிய சந்தையில் வாங்குவது தான் அந்த ‘மாஸ்டர் பிளான்’.
அதுவும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நேரத்தைப் பார்த்து, நியூயார்க்கில் இருந்த அந்தப் பழைய தங்கக் கட்டிகளை அப்படியே அமெரிக்க மார்க்கெட்டில் விற்றுத் தீர்த்தது பிரான்ஸ். விற்ற கையோடு, அதே அளவுக்குப் புதிய மற்றும் சர்வதேச தரத்திலான தங்கக் கட்டிகளை ஐரோப்பிய மார்க்கெட்டிலேயே வாங்கியது.
பிரான்ஸுக்கு 2 லாபங்கள்
1. பல ஆண்டுகளுக்கு முன்பு மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட அந்தத் தங்கத்தை, இன்றைய உச்ச விலைக்கு விற்றதால் பிரான்ஸுக்கு சுமார் 12.8 பில்லியன் யூரோக்கள், அதாவது ₹1,38,431 கோடி லாபம்!
2. எந்தவொரு போக்குவரத்துச் சிக்கலும், திருட்டுப் பயமும் இல்லாமல், 129 டன் தங்கமும் இப்போது பாரிஸில் உள்ள பாதுகாப்பான லாக்கர் அறைகளில் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டது.
இதன் மூலம் இப்போது பிரான்ஸின் வசம் உள்ள 2,437 டன் தங்கமும் எந்த வெளிநாட்டிலும் இல்லை, பிரான்ஸ் மண்ணிலேயே பாதுகாப்பாக இருக்கிறது.
ரிசர்வ் வங்கி
பிரான்ஸ் செய்தது மாஸ்டர் பிளான் என்றால், நமது இந்திய ரிசர்வ் வங்கியோ ஒரு மாபெரும் ‘சைலண்ட் ஆபரேஷன்’ செய்து வருகிறது. அதாவது லண்டன் பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நமது இந்தியாவின் தங்கத்தில் இருந்து, கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 274 டன் தங்கத்தைப் பலத்த பாதுகாப்புடன் இந்தியாவுக்குக் கொண்டு வந்துவிட்டது ஆர்பிஐ! ஆக, வல்லரசு நாடான பிரான்ஸாக இருந்தாலும் சரி, வளர்ந்து வரும் இந்தியாவாக இருந்தாலும் சரி… “நம்ம தங்கம் நம்ம ஊர்ல இருக்கறதுதான் சேஃப்” என்ற முடிவுக்கு வந்துவிட்டன. இதற்கு காரணம் மாறி வரும் உலக அரசியல் தான் என்பது அனைவருக்குமே தெரியும்!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/france-sold-gold-in-usa-why-it-pulls-129-tons-gold-from-us-in-its-the-secret-sell-and-buy-strategy-788561.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
