
Business
oi-Prasanna Venkatesh
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2025-26 நிதியாண்டில் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், பல விஷயங்கள் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்துக்கொண்டு இருக்கிறது. இதில் முக்கியமாக 2026ஆம் நிதியாண்டில் 23000 ஊழியர்களை குறைத்த பின்பும் ஊழியர் செலவு சுமார் ரூ.10,000 கோடி அதிகரித்துள்ளது. இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்ட உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் மார்ச் 31 முடிவில் சுமார் 5,84,519 ஊழியர்கள் பணியாற்றி இருந்ததாக தெரிவித்துள்ளது.

இந்த 5.8 லட்சம் ஊழியர்களுக்கான செலவு மட்டும் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஊழியர்களுக்கான செலவு என்பது அவர்களுக்கான சம்பளம், வேரியபிள் பே, போனஸ், இதர வசதிகள், இதர நல திட்டங்களுக்கான செலவுகள் என அனைத்தும் இதில் அடங்கும்.
மேலும் TCS இந்த நிதியாண்டில் மறுசீரமைப்பு செலவாக ரூ.1,388 கோடியை ஒதுக்கியிருந்தது. இதில் ரூ.1,268 கோடி 2026ல் பயன்படுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளது. மறுசீரமைப்பு செலவு என்பது ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் வெளியேற்றும் போது அவர்களுக்கான 3-6 மாத சம்பளம், போனல், லீவ் என்கேஷ்மென்ட் போன்ற பல்வேறு செலவுகளை ஈடு செய்ய ஒதுக்கப்பட்ட தொகையாகும்.
இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 23000 ஊழியர்களுக்கு சுமார் 1268 கோடி ரூபாய் அளவிலான தொகையை கொடுத்துள்ளதை மார்ச் காலாண்டு முடிவில் தெரிவித்துள்ளது. டிசிஎஸ்-ன் இந்த மறுசீரமைப்பு பயணம் கடந்த ஜூலை 2025-ல் தொடங்கியது. அப்போது TCS, பணியில் அமர்த்த முடியாத சில ஊழியர்களை விடுவிக்கும் (release) முடிவு எடுக்கப்பட்டது.
TCS தற்போது காலம் காலமாக அளித்து வந்த IT சேவை நிறுவனத்திலிருந்து AI அடிப்படையிலான நிறுவன சேவைகளை வழங்குவதில் அதிகப்படியான கவனம் செலுத்தி வருகிறது. 2026ஆம் நிதியாண்டில் 5500க்கும் அதிகமான ஏஐ திட்டங்களில் பணியாற்றியது மூலம் சுமார் 2.3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை வருமானமாக ஈட்டியுள்ளது டிசிஎஸ்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் வருடாந்திர சம்பள உயர்வை வழங்கும் முடிவை அறிவித்துள்ளது. சமீப காலமாக தொழில்நுட்பத் துறையில் பல நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், டிசிஎஸ் எடுத்துள்ள இந்த முடிவு ஐடி துறையில் நம்பிக்கை அளிக்கும் சிக்னலாக பார்க்கப்படுகிறது. பல இடங்களில் வேலை பாதுகாப்பு குறித்த கவலைகள் நிலவி வரும் நிலையில், இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பள உயர்வு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஆண்டிற்கான உயர்வு சதவீத விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வை பார்க்கும்போது, பெரும்பாலான ஊழியர்களுக்கு 4.5% முதல் 7% வரை உயர்வு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த செயல்திறன் காட்டிய ஊழியர்களுக்கு 10% வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, இந்த ஆண்டும் அதேபோன்ற செயல்திறன் அடிப்படையிலான உயர்வு முறை தொடரும் என தொழில்துறை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/tcs-cuts-over-23-000-jobs-in-fy26-but-employee-costs-still-rise-by-rs-10-000-crore-to-1-5-lakh-crore-788693.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
